வணிகம்
உள்நாட்டு விமான பயணிகளுக்கு புதிய கட்டுப்பாடுகள்.. விமான போக்குவரத்துத் துறை அதிரடி!

உள்நாட்டு விமான பயணம் செய்பவர்களுக்கு பேக் செய்யப்பட்ட ஸ்னாக்ஸ், மீல்ஸ் மற்றும் குளிர்பானங்கள் வழங்குவது குறித்து மத்திய விமான போக்குவரத்துத் துறையும் விமான நிறுவனங்களும் கலந்தாலோசித்து முக்கிய முடிவுகளை எடுத்துள்ளன. அதுமட்டுமல்லாமல் மாஸ்க் அணிய மறுக்கும் பயணிகளுக்கு கடும் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. அது குறித்து இங்கு விளக்கமாகப் பார்க்கலாம்.
மீல் சர்வீஸ்
1) விமான நிறுவனங்கள் பயணிகளுக்கு உணவுப் பொருட்கள் வழங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
2) பேக் செய்யப்பட்ட ஸ்னாக்ஸ், மீல்ஸ், குளிர்பானங்கள் போன்றவற்றையும் விமான போக்குவரத்துத் துறை விதிமுறைகளின்படி குறிப்பிட்ட நேர இடைவெளிகளில் வழங்கலாம்.
3) அனைத்து வகுப்பு விமான இருக்கைகளிலும் டிரே செட்-அப், பிளேட்ஸ் போன்றவை ஒருமுறை மட்டும் பயன்படுத்தக்கூடியவையாக இருக்க வேண்டும். மீண்டும் பயன்படுத்தக் கூடிய தட்டு போன்றவற்றில் உணவுப் பொருட்களை விநியோகிக்கக் கூடாது.
4) உணவை விநியோகிக்கும் ஊழியர்கள் முறையாகக் கையுறை போன்றவை அணிந்து இருக்க வேண்டும், கையுறைகளை ஒவ்வொருவருக்கும் உணவை வழங்கிய உடன் மாற்றிக்கொள்ள வேண்டும்.
5) விமானம் புறப்படும் முன்பு இந்த புதிய கட்டுப்பாடு முறைகளை முறையாக விளக்க வேண்டும்.
விமான பொழுதுபோக்கு சாதனங்கள்
1) விமானத்தில் பயணிகளுக்கு வழங்கப்படும் பொழுதுபோக்கு சாதனங்கள் கிருமி நாசினிகளை வைத்து ஒவ்வொரு பயணத்திற்கும் முன்பும் சுத்தம் செய்ய வேண்டும்.
2) ஹெட்போன் உள்ளிட்ட சாதனங்கள் ஒரு முறை மட்டுமே பயன்படுத்தக் கூடியதாக இருக்க வேண்டும். இல்லையெனில் கிருமி நாசினிகளை வைத்து சுத்தம் செய்ய வேண்டும்.
3) ஒவ்வொரு இருக்கைக்கும் தனித்தனியாகப் பொழுதுபோக்கு சாதனங்களை வழங்க வேண்டும்.
4) விமானத்தில் பயணிகள் எங்கு எல்லாம் தொட வாய்ப்புள்ளதோ அங்கு எல்லாம் கிருமி நாசினிகளைப் பயன்படுத்தி சுத்தம் செய்ய வேண்டும்.
பயணிகளுக்கு கடும் கட்டுப்பாடுகள்
விமானத்தில் பயணிக்கும் போது மாஸ்க் அணிய மறுத்ததால், அந்த பயணி வரும் காலத்தில் விமானத்தில் பயணம் செய்வதிலிருந்து தடை செய்யப்படுவார் என்று விமான போக்குவரத்துத் துறை இயக்குநர் அருண் குமார் தெரிவித்துள்ளார்.

















