கிரிக்கெட்
INDvENG – ‘எப்பா இங்கிலாந்து ரோகித் ஸ்கோரையாவது எடுப்பியா..? டவுட்டுதான்’- தமிழ்நாடு வெதர்மேன் பங்கம்
இந்தியா – இங்கிலாந்து கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி நேற்று சென்னை, சேப்பாக்கம் மைதானத்தில் ஆரம்பித்தது. இந்தியா, வலுவான முதல் இன்னிங்ஸ் ஸ்கோரை எடுத்த நிலைநில், இங்கிலாந்து தனது முதல் இன்னிங்ஸில் திணறி வருகிறது. இதனால் இங்கிலாந்து கிரிக்கெட் அணியை பங்கமாக கலாய்த்துள்ளார், பிரபல வானிலை வல்லுநரான தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான்.
நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்தியா – இங்கிலாந்து அணிகள் மோதி வருகின்றன. முதல் போட்டியில் இங்கிலாந்து அபார வெற்றி பெற்றது. இரண்டாவது போட்டிக்கான டாஸ் வென்ற இந்தியா, வெற்றி பெறும் எண்ணத்துடன் களமிறங்கியது. முதல் இன்னிங்ஸில் அதிரடி தொடக்க வீரர் ரோகில் சர்மா, சதமடித்து அசத்தினார். அதைப் போலவே துணை கேப்டன் அஜிங்கியா ரஹானே மற்றும் விக்கெட் கீப்பர் ரிஷப் பன்ட் ஆகியோர் அரைசதங்கள் அடித்தனர். இதனால் இந்திய அணி, தனது முதல் இன்னிங்ஸில் 329 ரன்கள் எடுத்தது.
இதைத் தொடர்ந்து விளையாடி வரும் இங்கிலாந்து, ஆரம்பம் முதலே விக்கெட்டுகளை மளமளவென இழந்து வருகிறது. தற்போது 106 ரன்களுக்கு 8 விக்கெட்டுகள் இழந்து தள்ளாடி வருகிறது. ரோகித், முதல் இன்னிங்ஸில் 161 ரன்கள் ஸ்கோர் செய்தார். அவரது ஸ்கோரை கூட இங்கிலாந்தால் எடுக்க முடியாது என நக்கல் செய்துள்ளார் வெதர்மேன்.
அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘இங்கிலாந்து, ரோகித்தின் 161 ரன்களை கடக்க முடியுமா. இந்த பிட்ச்சில் கண்டிப்பாக முடியாது என்று தான் நினைக்கிறேன். அஷ்வின் மற்றும் இந்தியப் பந்து வீச்சை இங்கிலாந்து அணியை துவம்சம் செய்ய உள்ளார்கள்’ என்றுள்ளார்.
Can England cross Rohit score of 161, looks very tough in this pitch. Ashwin and Co are rip England team apart.
— Pradeep John (Tamil Nadu Weatherman) (@praddy06) February 14, 2021
வானிலை வல்லுநராக மட்டுமல்லாமல், கிரிக்கெட் போட்டிகளிலும் அதிக ஆர்வம் கொண்டவர் பிரதீப் ஜான். அவர் எப்போது இந்தியா மேட்ச் நடந்தாலும் அது குறித்தான தரவுகளை வெளியிட்டுத் தொடர்ந்து கருத்து தெரிவிப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.