வணிகம்
சில வங்கிகள் மினிமம் பேலன்ஸ் விதியை நீக்கியது – சிலர் உயர்த்தியது! வாடிக்கையாளர்கள் தெரிந்துகொள்ள வேண்டியது

வங்கிக் கணக்குகளில் குறைந்தபட்ச இருப்புத் தொகை (மினிமம் பேலன்ஸ்) விதி தொடர்பாக மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. சில அரசு வங்கிகள் வாடிக்கையாளர்களின் நலனுக்காக இந்த நிபந்தனையை நீக்கியுள்ளன. அதே சமயம், சில தனியார் வங்கிகள் குறைந்தபட்ச இருப்புத் தொகையை உயர்த்தியுள்ளன.
மினிமம் பேலன்ஸ் என்றால் என்ன?
சேமிப்பு கணக்கில் வங்கிகள் நிர்ணயித்த ஒரு குறைந்தபட்ச தொகை எப்போதும் இருக்க வேண்டும். இந்த தொகை குறைந்தால், வங்கிகள் பராமரிப்பு கட்டணமாக அபராதம் வசூலிக்கும். வாடிக்கையாளர் சேவை, ஏடிஎம் பராமரிப்பு, மொபைல் பேங்கிங், ஊழியர் சம்பளம் உள்ளிட்ட செலவுகளுக்காக இந்த விதி பின்பற்றப்படுகிறது.
நிபந்தனை நீக்கிய வங்கிகள்
ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா (SBI), பஞ்சாப் நேஷனல் பாங்க் (PNB), இந்தியன் பாங்க் போன்ற அரசு வங்கிகள், குறைந்தபட்ச இருப்புத் தொகை விதியை நீக்கியுள்ளன. ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மல்வோத்ரா கூறியதாவது, “இந்த விதி குறித்து RBI எந்த நேரடி கட்டுப்பாடும் விதிக்கவில்லை. ஒவ்வொரு வங்கியும் தனிப்பட்ட முறையில் தீர்மானிக்கலாம்” என்றார்.
தனியார் வங்கிகளில் உயர்வு
சில தனியார் வங்கிகள், குறிப்பாக ஐசிஐசிஐ பாங்க், குறைந்தபட்ச இருப்புத் தொகையை உயர்த்தியுள்ளது. ஆகஸ்ட் 1 முதல் புதிய சேமிப்பு கணக்குகளுக்கு மாத சராசரி இருப்புத் தொகை ரூ.10,000-ல் இருந்து ரூ.50,000 வரை உயர்த்தப்பட்டுள்ளது.
ஜீரோ பாலன்ஸ் கணக்கு விருப்பம்
கணக்கு திறப்பதற்கு முன், குறைந்தபட்ச இருப்புத் தொகை மற்றும் அதைக் கடைபிடிக்காததால் வரும் அபராதத்தை வாடிக்கையாளர்கள் தெரிந்து கொள்ள வேண்டும். அரசு வங்கிகளில் நிபந்தனை விலக்கு இருந்தாலும், தனியார் வங்கிகளில் அதிக இருப்புத் தொகை தேவைப்படலாம்.





















