செய்திகள்
பிரதமர் தொடங்கி வைத்த 3 புதிய வந்தே பாரத் ரயில்கள்: சென்னை விழாவில் ஆளுநர் பங்கேற்பு!

சென்னை: பிரதமர் நரேந்திர மோடி, ஆ. 31 ஆம் தேதி மூன்று புதிய வந்தே பாரத் ரயில் சேவைகளை தொடங்கி வைத்தார். இவை, சென்னை எழும்பூர் – நாகர்கோவில், மதுரை – பெங்களூரு, மற்றும் உத்தரப் பிரதேசம் மீரட் – லக்னோ இடையேயான ரயில் சேவைகளை உள்ளடக்கியது. இந்த சேவைகளின் தொடக்க விழா புதுடெல்லியில் இருந்து காணொலி மூலமாக நடைபெற்றது, அதில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் ஒரு முக்கிய மையமாக இருந்தது.
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நடைபெற்ற விழாவில், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், மற்றும் பல முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர். ஆளுநர் ஆர்.என்.ரவி, தனது பேச்சில், “இன்றைய தினம் தமிழ் மக்களுக்கு பிரதமர் மோடி வழங்கிய பெரும் பரிசு இந்த இரண்டு வந்தே பாரத் ரயில்கள். தமிழ் மொழியும், கலாசாரமும் பிரதமரின் இதயத்தில் ஆழமாக வேரூன்றியிருக்கின்றன. தமிழர்களின் பாரம்பரியத்தை உலகிற்கு எடுத்துச்செல்லும் நடவடிக்கையாக இந்த புதிய ரயில்கள் விளங்குகின்றன” என்று குறிப்பிட்டார்.
மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தனது உரையில், “பிரதமர் மோடியின் தலைமையில், கடந்த 10 ஆண்டுகளில் இந்திய ரயில்வே துறையில் மிகப் பெரிய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. சுயசார்பு இந்தியா திட்டத்தின் கீழ் உற்பத்தி செய்யப்பட்ட வந்தே பாரத் ரயில்கள், இந்தியாவின் தொழில்நுட்ப மேம்பாட்டினை வெளிப்படுத்துகின்றன. சென்னை நகரை மையமாகக் கொண்டு பல புதிய வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படுகின்றன, இது தமிழகத்தின் போக்குவரத்து முன்னேற்றத்தில் மத்திய அரசின் பங்களிப்பு முக்கியம்” எனத் தெரிவித்தார்.
விழாவில், தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர், தெலங்கானா மாநில முன்னாள் ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன், தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங், மற்றும் பல முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.




















