தமிழ்நாடு
வேலூர் தோல்விக்கு காரணம் ஓபிஎஸ் மகன் மற்றும் அமித் ஷாவா? எடப்பாடி பழனிசாமி பரபரப்பு பேட்டி!

நடந்து முடிந்த வேலூர் மக்களவை தேர்தலில் அதிமுக வேட்பாளர் ஏ.சி.சண்முகம் தோல்வியை தழுவினார். இந்த தோல்விக்கு காரணம் சிறுபான்மையினர் வாக்கு அதிமுகவுக்கு கிடைக்கவில்லை என்ற குற்றச்சாட்டு பரவலாக பேசப்படுகிறது.
சிறுபான்மையினர் வாக்கு அதிமுகவுக்கு கிடைக்காமல் போனதுக்கு காரணமாக இரண்டு சம்பவங்கள் கூறப்படுகிறது. ஒன்று, முத்தலாக் தடை மசோதாவுக்கு ஆதரவாக பேசி அதிமுக ஆதரவு அளிப்பதாக வாக்களித்த ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் குமார். மற்றொன்று வேலூர் தேர்தல் அன்று காஷ்மீர் சிறப்பு அந்தஸ்தை அமித் ஷா ரத்து செய்தது. இந்த இரண்டும் வேலூர் தேர்தலில் எதிரொலித்தாக பேசப்படுகிறது.
இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் முத்தலாக் மற்றும் காஷ்மீர் விவகாரத்தை ஆதரித்ததால், வேலூரில் சிறுபான்மையினர் வாக்கு அதிமுகவுக்கு கிடைக்கவில்லையா என கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதில் அளித்த அவர், வாக்கு யாருக்கு அளிக்க வேண்டும் என்பது ரகசியமான ஒன்று. அப்படி இருக்கும் போது சிறுபான்மையின மக்கள் வாக்களித்தார்களா, பெரும்பான்மையினர் வாக்களித்தார்களா என்பது யாருக்கு தெரியும். தமிழகம் ஜாதி, மதத்துக்கு அப்பாற்பட்ட ஒரு மாநிலமாகும். விரைவில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும். இதில் அதிமுக பெரும்பான்மையான இடத்தில் வெற்றி பெறும் என்றார்.




















