இந்தியா
இனி போன் எடுக்கும் போது ‘ஹேலோ’ சொல்லக் கூடாது.. அரசு ஊழியர்களுக்கு அதிரடி உத்தரவு!
நாம் போன் அழைப்புகளை ஏற்கும் போது முதலில் பலரும் பயன்படுத்தும் முதல் வார்த்தை ஹேலோ. இந்த ஹேலோவுக்கு பதிலாக வேறு வார்த்தையைக் கூறச் சொன்னால் என்ன செய்வீர்கள்.
மகாராஷ்டிராவில் அந்த மாநில அரசு ஊழியர்கள் இனி போன் அழைப்புகளை ஏற்கும் போது இனி ஹேலோ எனச் சொல்லக் கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது. ஹேலோவிற்கு பதிலாக வந்தேமாதரம் என்று தான் சொல்ல வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
ஹேலோ என்பது மேற்கத்தியக் கலாச்சாரம். எனவே அதை தவிர்த்து வந்தேமாதரம் என சொல்லுங்கள் என அரசு ஊழியர்களுக்குச் சுற்று அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
மேலும் அரசு ஊழியர்களை ஒருவர் சந்திக்க வரும் போதும் வந்தேமாதரம் என்பதைப் பயன்படுத்தியே வரவேற்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வந்தேமாதரம் என்றால் என்ன?
வந்தேமாதரம் என்றால் ‘தாயே உனக்கு எங்கள் வணக்கம்’ என்பது அர்த்தம் என கூறப்படுகிறது.
நாவலாசிரியர் பங்கிம் சந்திர சாட்டர்ஜி 1882-ம் ஆண்டு வங்க மொழியில் எழுதிய ஆனந்தமடம் என்ற நூலில் ‘வந்தேமாதரம்’ எனற வார்த்தை குறிப்பிடப்பட்டு இருந்தது. 1896-ம் ஆண்டு நடைபெற்ற 12வது தேசிய காங்கிரஸ் கூட்டத்தில் ரவீந்திரநாத் தாகூர் எடுத்த முயற்சியால் இந்த முழக்காம் பொது விழாக்களில் பயன்படுத்தத் தொடங்கப்பட்டது. மகாத்மா காந்தி தான் எழுதும் கடிதங்களில் வந்தேமாதரம் என குறிப்பிடத் தொடங்கினார். பின்னர் இது சுதந்திர முழக்கமாகவும் மாறியது.