வணிகம்
AI மாற்றத்தின் அதிர்ச்சி.. மெட்டாவில் 8,000 பேருக்கு வேலை ஆபத்து! அதிகாபணிநீக்க மெயில்

ஊடக அறிக்கைகளின்படி, வேலைநீக்கம் குறித்த மின்னஞ்சல்கள் அதிகாலை 4 மணியளவில் ஊழியர்களுக்கு அனுப்பப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. குறிப்பாக Singapore நாட்டில் உள்ள ஊழியர்களுக்கு உள்ளூர் நேரப்படி அதிகாலையில் இந்த அறிவிப்பு வந்ததாக கூறப்படுகிறது. மேலும், United States, United Kingdom உள்ளிட்ட பல நாடுகளில் உள்ள ஊழியர்களுக்கும் நேர மண்டலங்களுக்கு ஏற்ப தகவல்கள் அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அறிக்கைகளின்படி, மெட்டா நிறுவனம் தனது உலகளாவிய பணியாளர் எண்ணிக்கையை சுமார் 10 சதவீதம் குறைக்க திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் சுமார் 8,000 ஊழியர்கள் பணிநீக்க ஆபத்தில் உள்ளதாக கூறப்படுகிறது. தற்போது உலகம் முழுவதும் சுமார் 78,000 பேர் மெட்டாவில் பணிபுரிகின்றனர்.
Mark Zuckerberg தலைமையிலான மெட்டா நிறுவனம், செயற்கை நுண்ணறிவு துறையில் மிகப்பெரிய முதலீடுகளை மேற்கொண்டு வருகிறது. OpenAI மற்றும் Google போன்ற நிறுவனங்களுடன் போட்டியிடும் வகையில், இந்த ஆண்டில் மட்டும் 125 பில்லியன் முதல் 145 பில்லியன் டாலர் வரை AI துறையில் முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதனுடன், பணிநீக்கத்துடன் மட்டும் நின்றுவிடாமல், சுமார் 7,000 ஊழியர்களை புதிய AI குழுக்களுக்கு மாற்றவும் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இந்த AI குழுக்கள் எதிர்காலத்தில் மனிதர்கள் செய்யும் பல பணிகளை தானியங்கியாக மேற்கொள்ளக்கூடிய AI ஏஜென்ட்களை உருவாக்கும் பணியில் ஈடுபடும் என கூறப்படுகிறது.
மெட்டா மட்டுமின்றி, பல்வேறு முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களும் பணியாளர் எண்ணிக்கையை குறைக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. Cisco நிறுவனம் சமீபத்தில் ஆயிரக்கணக்கான ஊழியர்களை பணிநீக்கம் செய்ய திட்டமிட்டுள்ளதாக தெரிவித்தது. அதேபோல் Microsoft மற்றும் Amazon நிறுவனங்களும் வேலைவாய்ப்பு குறைப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றன.
இந்த சம்பவத்தையடுத்து, அதிகாலை நேரத்தில் வேலைநீக்க மின்னஞ்சல்கள் அனுப்பப்பட்டதை வைத்து சமூக ஊடகங்களில் பல மீம்ஸ்களும் வைரலாகி வருகின்றன. AI வளர்ச்சி வேகமெடுத்துள்ள நிலையில், தொழில்நுட்பத் துறையில் வேலைவாய்ப்புகளின் எதிர்காலம் குறித்து புதிய விவாதங்களும் எழுந்துள்ளன.
















