கிரிக்கெட்
10 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தானை வென்றது லக்னோ அணி!

16 வது ஐபிஎல் தொடரின் நேற்றைய லீக் சுற்று ஆட்டத்தில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை லக்னோ சூப்பர் ஜயன்ட்ஸ் அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் போராடி வென்றது. சவாய் மான்சிங் மைதானத்தில் நேற்று இரவு நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பந்து வீசியது.
லக்னோ 154 ரன்கள்
லக்னோ அணியின் தொடக்க வீரர்களாக கேப்டன் கே.எல்.ராகுல் மற்றும் கைல் மேயர்ஸ் களமிறங்கினர். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 82 ரன்களைச் சேர்த்து வலுவான அடித்தளம் அமைத்தது. ராகுல் 39 ரன்களுக்கு அவுட் ஆக, அடுத்து வந்த பதோனி 1 ரன் எடுத்து வெளியேறினார். பின்னர் ஹூடா 2 ரன், மேயர்ஸ் 51 ரன் எடுத்து அஷ்வின் சுழலில் அடுத்தடுத்து அவுட் ஆனார்கள்.
ஸ்டாய்னிஸ் 21 ரன்கள், நிகோலஸ் பூரன் 29 ரன்கள், யுத்வீர் சிங் 1 ரன் எடுத்து அவுட் ஆக, லக்னோ அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 154 ரன்களை குவித்தது. க்ருணால் பாண்டியா 4 ரன்னுடன் களத்தில் இருந்தார். ராஜஸ்தான் பந்து வீச்சில் அஷ்வின் 2, போல்ட், சந்தீப் மற்றும் ஹோல்டர் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.
லக்னோ வெற்றி
அடுத்து களமிறங்கிய ராஜஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 144 ரன்களை மட்டுமே எடுத்து, 10 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. அதிகபட்சமாக ஜெய்ஸ்வால் 44 ரன்களை எடுத்தார். ஜோஸ் பட்லர் 40 ரன் மற்றும் படிக்கல் 26 ரன்களை எடுத்தனர். லக்னோ பந்து வீச்சில் ஆவேஷ் கான் 3 விக்கெட் மற்றும் ஸ்டாய்னிஸ் 2 விக்கெட் வீழ்த்தினர். இதன் மூலம் லக்னோ அணி 2 புள்ளிகளை தட்டிச் சென்றது.