தமிழ்நாடு
தேனியில் களமிறங்கிய தங்க தமிழ்செல்வன்; எனக்கு எதிராக யார் நின்றாலும் கவலையில்லை: ஓபிஎஸ் மகன் பதிலடி!

அமமுகவின் இரண்டாம் கட்ட வேட்பாளர்கள் பட்டியல் இன்று வெளியானது. இதில் தேனி மக்களவை தொகுதிக்கு அமமுக முக்கிய தலைவர் தங்க தமிழ்செல்வன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். அவர் தேனி தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டது முதல் அரசியல் களத்தில் தேனி தொகுதி பரபரப்பாக பேசப்படுகிறது.
தேனி தொகுதியில் அதிமுக சார்பில் துணை முதல்வர் ஓபிஎஸ்-இன் மகன் ரவீந்திரநாத் போட்டியிடுகிறார். இந்த சூழலில் அவரை எதிர்த்து தங்க தமிழ்செல்வனை அமமுக களமிறக்கியது தான் இந்த பரபரப்புக்கு காரணம். தேனி தொகுதியை பொறுத்தவரை ஓபிஎஸ், தங்க தமிழ்செல்வன் இருவருமே செல்வாக்கு மிக்கவர்கள். இதனால் அந்த தொகுதியில் போட்டி கடுமையாக இருக்கும் என கூறப்படுகிறது.
இந்நிலையில் இதுகுறித்து தெரிவித்த அமமுக வேட்பாளர் தங்க தமிழ்செல்வன், தேனித் தொகுதியில் டிடிவி தினகரனின் உழைப்பு இருக்கிறது. இங்கே அவரைத் தெரியாதவர்கள் இல்லை. அதே போல ஓபிஎஸ் தேனி மாவட்டத்துக்காக எவ்வாறு உழைத்தார் என்பதை மக்கள் நன்கு அறிவார்கள். அப்படிப்பட்ட நிலையில்தான் தன் மகனை நிறுத்துகிறார். நான் மக்களை நம்பி தேனித் தொகுதியில் நிற்கிறேன் என்றார்.
இதனையடுத்து தேனி தொகுதியில் தங்க தமிழ்செல்வன் அமமுக சார்பில் முன்னிறுத்தப்படுவது குறித்து பதில் அளித்த துணை முதல்வர் ஓபிஎஸ்-இன் மகன் ரவீந்திரநாத், தேனியில் எனக்கு எதிராக யார் நின்றாலும் கவலை இல்லை, பிரச்சார யுக்திகள் அதற்கு பதில் சொல்லும், மக்கள் பதில் சொல்வார்கள் என்றார். தேனியில் கடும் போட்டி தான் இந்தமுறை.




















