கிரிக்கெட்
“நான் நிரபராதி”: பிசிசிஐ-க்கு கடிதம் எழுதிய விராட் கோலி!

16வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இதில், லக்னோவில் நடந்த போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியைச் சேர்ந்த விராட் கோலிக்கும், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியைச் சேர்ந்த கவுதம் கம்பீருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் நடந்தது. இந்த மோதல் வீடியோ இணையத்தில் வைரலாகியது.
அபராதம்
போட்டி விதிமுறைகளை மீறிய குற்றத்திற்காக விராட்கோலி மற்றும் கவுதம் கம்பீர் ஆகிய இருவருக்கும் போட்டி கட்டணத்தில் 100 சதவீதத்தையும், நவீன் உல்-ஹக்குக்கு போட்டி கட்டணத்தில் 50 சதவீதத்தையும் ஐபிஎல் நிர்வாகம் அபராதமாக விதித்தது. இதனால் விராட் கோலிக்கு ரூ.1 கோடியும், கம்பீருக்கு ரூ.25 இலட்சமும் இழப்பு ஏற்பட்டுள்ளது.
மைதானத்தில் நடக்கும் சிறுசிறு மோதல்களை அங்கேயே மறந்து விட்டு நாகரீகமாக கைகுலுக்குவதை தவிர்த்து விட்டு, ஆட்டம் முடிந்த பிறகும் வீரர்கள் மோதல் போக்கை கடைப்பிடித்த சம்பவம், அதிர்ச்சியையும் அதிருப்தியையும் ஏற்படுத்தி இருக்கிறது.
நான் நிரபராதி
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தின் போது, ஆக்ரோஷத்துடன் நடந்து கொண்டதற்கு விராட் கோலிக்கு போட்டி கட்டணத்தில் 10 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்திற்கு (BCCI), விராட் கோலி கடிதம் எழுதியதாக கூறப்படுகிறது. அவர் பிசிசிஐக்கு எழுதிய கடிதத்தில், “தான் நிரபராதி என்றும், தான் எந்த தவறும் செய்யவில்லை” என்றும் கோலி தெரிவித்துள்ளார்.