வணிகம்
தங்க நகைக்கடன் புதிய கட்டுப்பாடுகள்: ரிசர்வ் வங்கியின் அறிவிப்பு குறித்து ராமதாஸ் கடும் எதிர்ப்பு

ரிசர்வ் வங்கியின் புதிய தங்க நகைக்கடன் விதிகளை ராமதாஸ் கண்டனம் தெரிவித்தார்!
தங்க நகைக்கடன் முறையில் ரிசர்வ் வங்கி கொண்டு வந்துள்ள புதிய கட்டுப்பாடுகள் குறித்து பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
தங்கத்தின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், அதனை அடகுவைத்து உடனடி நிதி தேவைகளை நிறைவேற்றும் ஏழை, நடுத்தர மக்களுக்கு இந்த புதிய கட்டுப்பாடுகள் பெரும் சிரமங்களை ஏற்படுத்தும் என அவர் கூறினார்.
ரிசர்வ் வங்கியின் வரைவு விதிகளின்படி:
தங்க மதிப்பில் 75% வரை மட்டுமே கடன் வழங்கப்படும் (முன்னர் 90% வரை வழங்கப்பட்டது).
ஒரு நபருக்கு 1 கிலோ தங்க நகை மற்றும் 50 கிராம் தங்க நாணயம் வரை மட்டுமே அடகு வைக்க அனுமதி.
அடகு வைக்கும் நகைகள் உரிமையுடையவையாக இருக்க வேண்டும் என்பதற்கான ஆதாரச் சான்றுகள் கட்டாயம்.
தர சான்றிதழுடன் மட்டுமே நகைக்கடன் வழங்க அனுமதி.
வங்கிகள் விற்கும் தங்க நாணயங்களுக்கு மட்டுமே கடன் வழங்கப்படும்.
இந்த கட்டுப்பாடுகள் காரணமாக ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்கு நகைக்கடன் பெற முடியாமல் போகும் என்று ராமதாஸ் எச்சரிக்கிறார். குறிப்பாக, தலைமுறைகள் கடந்த நகைகள் வழக்கமாக ரசீதிகளின்றி இருக்கும் நிலையில், உரிமையை நிரூபிக்க சான்று கேட்பது நியாயமற்றது என்றும், இத்தகைய நடைமுறை மக்கள் மீதான நம்பிக்கையை குறைக்கும் என்றும் அவர் கூறினார்.
மேலும், “இந்த புதிய வரைவு விதிகள் நடைமுறையில் இருந்தால், மக்கள் வங்கிகளை விட்டு தனியார் அடகுக் கடைகள் மற்றும் கந்து வட்டிக்காரர்களை நாட வேண்டிய நிலை ஏற்படும்,” என்றும் குறிப்பிட்டார். எனவே, ரிசர்வ் வங்கி விதித்துள்ள விதிகளில் உள்ள பிரிவுகள் 2, 4 மற்றும் 6 ஆகியவை திரும்பப் பெறப்பட வேண்டும் அல்லது தற்போதைய நடைமுறை தொடரும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
புதிய விதிகளால் நகைக்கடன் பெற முடியாது: ஏழை, நடுத்தர மக்களை பாதிக்கும் நகைக்கடன் வரைவு விதிகளை ரிசர்வ் வங்கி திரும்பப் பெற வேண்டும்!
வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் நகைக்கடன் வழங்குவதற்கான 9 வழிகாட்டுதல்கள் அடங்கிய புதிய வரைவு விதிகளை இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டிருக்கிறது.…
— Dr S RAMADOSS (@drramadoss) May 21, 2025

















