இந்தியா
வங்கி நகைக்கடன் – அமலுக்கு வரும் புதிய விதிமுறைகள் – எப்போது தெரியுமா?

ஒன்றிய அரசு கடந்த நாடாளுமன்ற கூட்டத்தின்போது தெரிவித்தபடி வங்கிகளில் பெறப்படும் நகைக்கடன்களுக்கான புதிய வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்கப்பட்டு அமைச்சரவை அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய விதிமுறைகள் ஏப்ரல் 1, 2026 முதல் அனைத்து வங்கிகள் மற்றும் வங்கி சாரா நிதி நிறுவனங்களுக்கு (NBFC) கட்டாயமாக்கப்பட உள்ளன.
இந்த 2026 சீர்திருத்தத்தின் மிக முக்கியமான அம்சம், நகை மதிப்பிற்கு நிகரான கடன் தொகையை வகைப்படுத்தியது ஆகும். கடந்த காலங்களில் இது பொதுவாக 75% ஆக மட்டுமே இருந்தது. ஆனால் தற்போது, எளிய மற்றும் நடுத்தர மக்களின் அவசரத் தேவைகளை கருத்தில் கொண்டு, ₹2.5 லட்சம் வரையிலான சிறிய கடன்களுக்கு 85% ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
இதன் மூலம், ₹1 லட்சம் மதிப்புள்ள தங்கத்தை அடகு வைத்தால், முன்பு ₹75,000 மட்டுமே கடன் கிடைத்து வந்த நிலையில், இனி ₹85,000 வரை கடன் பெற முடியும். ₹2.5 லட்சம் முதல் ₹5 லட்சம் வரையிலான கடன்களுக்கு 80% தொகையும், ₹5 லட்சத்திற்கு மேற்பட்ட பெரிய கடன்களுக்கு 75% தொகையும் கடனாக வழங்கப்படும்.
கடன் வாங்குபவர்களின் நீண்ட காலப் புகாரான ‘நகையைத் திரும்பப் பெறுவதில் தாமதம்’ என்பதற்கு RBI முற்றுப்புள்ளி வைத்துள்ளது. கடனை முழுமையாகத் திருப்பிச் செலுத்திய 7 வேலை நாட்களுக்குள் வாடிக்கையாளரின் நகைகளை வங்கி திருப்பி ஒப்படைக்க வேண்டும். அவ்வாறு ஒப்படைக்கத் தவறினால், தாமதமாகும் ஒவ்வொரு நாளுக்கும் ₹5,000 அபராதமாக வங்கி வாடிக்கையாளருக்கு வழங்க வேண்டும் என்று அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
நகை அடகு வைக்கும் போது நடக்கும் முறைகேடுகளைத் தவிர்க்க பின்வரும் விதிகள் கட்டாயமாக்கப்பட்டுள்ளன:
நேரடி மதிப்பீடு: வாடிக்கையாளர் முன்னிலையிலேயே நகையின் தரம் மற்றும் எடை சரிபார்க்கப்பட வேண்டும்.
தரச் சான்றிதழ்: நகையின் மொத்த எடை, கற்களின் எடை தவிர்த்த நிகர எடை மற்றும் 22 காரட் தங்கத்திற்கு நிகரான மதிப்பு ஆகியவற்றை உள்ளடக்கிய சான்றிதழ் வாடிக்கையாளருக்கு வழங்கப்பட வேண்டும்.
நிர்ணயிக்கப்பட்ட விலை: முந்தைய நாளின் இறுதி விலை அல்லது கடந்த 30 நாட்களின் சராசரி விலை ஆகியவற்றில் எது குறைவோ, அதன் அடிப்படையிலேயே நகை மதிப்பு கணக்கிடப்பட வேண்டும்.
அதே சமயம், கடனைத் திருப்பிச் செலுத்தாமல் காலத்தைக் கடத்துவதைத் தடுக்கவும் RBI நடவடிக்கை எடுத்துள்ளது. ‘புல்லட் ரீபேமெண்ட்’ (Bullet Repayment) முறையில் கடன் வாங்குபவர்கள், 12 மாதங்களுக்குள் அசல் மற்றும் வட்டியை முழுமையாகச் செலுத்த வேண்டும்.
வட்டி விகிதங்களைப் பொறுத்தவரை, வங்கிகளில் ஆண்டுக்கு 8.75% முதல் 11% வரை வசூலிக்கப்படுகிறது. முத்தூட் மற்றும் மணப்புரம் போன்ற நிறுவனங்களில் வட்டி விகிதம் சற்று அதிகமாக, அதாவது 9.9% முதல் தொடங்கி கடனின் கால அளவைப் பொறுத்து மாறுபடுகிறது. புதிய விதிமுறைப்படி, ₹2.5 லட்சத்திற்குக் கீழ் கடன் வாங்குபவர்களுக்கு வருமானச் சான்று அல்லது கடுமையான சிபில் (CIBIL) ஸ்கோர் சரிபார்ப்பு போன்ற நடைமுறைகள் தளர்த்தப்பட்டுள்ளன. இதனால் விவசாயிகளும், சிறு வியாபாரிகளும் மிக விரைவாக, அதாவது 30 நிமிடங்களுக்குள்ளேயே கடன் தொகையைப் பெற்றுக்கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது.


















