தமிழ்நாடு
‘பழனிசாமியை ஜெயிக்கிறது ஒரு சவாலே கிடையாது!’- எடப்பாடி தொகுதியின் திமுக வேட்பாளர் உறுதி

எதிர் வரும் சட்டசபைத் தேர்தலுக்கு அதிமுக கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளவர் எடப்பாடி பழனிசாமி. இந்த முறையும் அவர் எடப்பாடி தொகுதியில் தான் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து திமுக சார்பில் சம்பத்குமார் என்பவர் களம் காண்கிறார். இருவருக்கும் இடையில் கடும் போட்டி நிலவும் என்று கூறப்படும் நிலையில், பழனிசாமியை தோற்கடிப்பது ஒரு பெரிய விஷயமே இல்லை என்று சம்பத்குமார் பேசியுள்ளார்.
இது குறித்து அவர் மேலும் கூறுகையில், ‘எங்கள் தலைவர் ஸ்டாலினின் சாதனைகளையும், கலைஞர் செய்த சாதனைகளையும் தொகுதி மக்களுக்குப் பட்டியில் போட்டாலே எங்களின் வெற்றி உறுதியாகிவிடும்.

கொரோனா காலக்கட்டத்தில் திமுக சார்பில் நாங்கள் மக்களுக்கு அவ்வளவு சேவைகளைச் செய்துள்ளோம். ஆனால் பழனிசாமி, 10 ஆண்டுகளாக அமைச்சராக இருந்துள்ளார், முதல்வராக இருக்கிறார். அதிகாரம் கையில் இருந்த போதும், தொகுதிக்கு அவர் ஒன்றும் செய்யவில்லை.
எடப்பாடி தொகுதியில் கிட்டத்தட்ட 10 ஆயிரம் இளைஞர்கள் படித்துவிட்டு வேலை இல்லாமல் அவதிப்பட்டு வருகின்றனர். பழனிசாமி தொகுதி பக்கம் வருவதே கிடையாது. அதைச் செய்வேன், இதைச் செய்வேன் என்று அவரிடம் இருந்து அறிக்கை மட்டும் தான் வரும். ஆனால் செயலில் ஒன்றும் இருக்காது. மொத்தத்தில் எடப்பாடி தொகுதியில் பழனிசாமியை எதிர்த்துப் போட்டியிட்டு வெற்றி பெறுவது என்பது ஒரு சவாலே கிடையாது’ என்று கூறியுள்ளார்.






















