கிரிக்கெட்
IPL- மும்பை இந்தியன்ஸ் அணியுடன் பயிற்சியை ஆரம்பித்தார் சச்சின் மகன்!
2021 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடர் வரும் ஏப்ரல் 9 ஆம் தேதி ஆரம்பிக்க உள்ளது. இதையொட்டி ஐபிஎல் மினி ஏலம் சில மாதங்களுக்கு முன்னர் சென்னையில் நடந்தது. இதில் பல்வேறு அணிகள் தங்களுக்கு விருப்பமான வீரர்களை ஏல முறையில் எடுத்துள்ளது.
அந்த வகையில் பேட்டிங் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் மகனான அர்ஜுன் டெண்டுல்கரை 20 லட்ச ரூபாய் கொடுத்து மும்பை இந்தியன்ஸ் அணி வாங்கியது. இதுவரை உள்ளூர் போட்டிகளிலும், முதல் தர டி20 போட்டிகளிலும் அர்ஜுன் பெரிய அளவு சாதிக்காத நிலையில், அவருக்கு இவ்வளவு பெரிய விலை கொடுத்துள்ளது சர்ச்சையாகி வருகிறது.
இந்த சர்ச்சைகளுக்கு முற்றுப் புள்ளி வைக்கும் வகையில் மும்பை இந்தியன்ஸ் அணியின் பயிற்சியாளர் மகேலா ஜெயவர்தனா, ‘அர்ஜுனை நாங்கள் அவரின் திறமையின் அடிப்படையில் மட்டும் தான் எடுத்தோமே தவிர, வேறு எந்தக் காரணங்களும் கிடையாது’ என்று விளக்கம் அளித்துள்ளார்.
இப்படியான சூழலில் அவர் மும்பை இந்தியன்ஸ் அணியுடன் தனது பயிற்சியை முதல் முறையாக ஆரம்பித்துள்ளார். இந்த சீசனில் வாய்ப்பு கொடுக்கப்பட்டால் அர்ஜுன் எப்படி விளையாடுவார் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.