வணிகம்
இந்தியாவில் 500-க்கும் மேற்பட்ட ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் அமேசான்!

உலகளவில் செயல்பட்டு வரும் முன்னணி இ-காமர்ஸ் மற்றும் தொழில்நுட்ப நிறுவனமான அமேசான், தனது சமீபத்திய பணியாளர் குறைப்புத் திட்டத்தின் ஒரு பகுதியாக இந்தியாவில் 500-க்கும் மேற்பட்ட ஊழியர்களை பணிநீக்கம் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தி ஃபைனான்ஷியல் எக்ஸ்பிரஸ் வெளியிட்டுள்ள செய்தியின்படி, அமேசான் உலகளவில் சுமார் 16,000 நிறுவன ஊழியர்களை பணிநீக்கம் செய்ய முடிவு செய்துள்ளது. இதன் ஒரு பகுதியாக இந்தியாவில் மேற்கொள்ளப்படும் பணியாளர் குறைப்பு, நிறுவனத்தின் இ-காமர்ஸ் பிரிவு மற்றும் அமேசான் வெப் சர்வீசஸ் (AWS) ஆகிய இரு பிரிவுகளிலும் கிட்டத்தட்ட சம அளவில் அமலும் படுத்தப்படவுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த முடிவு, உலக பொருளாதார சூழ்நிலை, செலவுக் குறைப்பு நடவடிக்கைகள் மற்றும் செயல்திறன் மேம்பாடு போன்ற காரணங்களை முன்னிட்டு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும், இதுகுறித்து அமேசான் நிறுவனம் இதுவரை அதிகாரப்பூர்வமாக எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை.
இந்த பணிநீக்கம் இந்திய தொழில்நுட்பத் துறையில் பணிபுரியும் ஊழியர்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது. சமீப காலமாக பல பன்னாட்டு நிறுவனங்கள் பணியாளர் குறைப்பை மேற்கொண்டு வரும் நிலையில், அமேசானின் இந்த முடிவு முக்கியத்துவம் பெறுகிறது.

















