தமிழ்நாடு
ஆளுநர் பதவியே தேவையில்லாத ஒன்று: 7 பேர் விடுதலை விவகாரத்தில் மு.கஸ்டாலின் ஆவேசம்!

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்றுள்ள பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரின் விடுதலை தொடர்பாக இன்று சட்டசபையில் பேசிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆளுநர் பதவியே தேவையில்லாத ஒன்று என விளாசியுள்ளார்.
27 வருடங்களுக்கு மேலாக சிறையில் உள்ள பேரறிவாளன், நளினி உள்ளிட்ட 7 பேரின் விடுதலை தொடர்பாக ஆளுநரே முடிவெடுத்துக் கொள்ளலாம் என்று கடந்த ஆண்டு உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதனையடுத்து இவர்களின் விடுதலைக்காக தமிழக அமைச்சரவை தீர்மானம் இயற்றி ஆளுநருக்கு அனுப்பிவைத்தது. அந்த தீர்மானத்தின் மீது ஆளுநர் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இதனையடுத்து இந்த விவகாரத்தில் ஆளுநர் விரைந்து நடவடிக்கை எடுக்க பல்வேறு அரசியல் கட்சியினரும், அமைப்புகளும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக இன்று தமிழக சட்டசபையில் பேசிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரின் விடுதலை தொடர்பாக ஆளுநருக்கு அனுப்பிய தமிழக அமைச்சரவையின் தீர்மானம் எந்த நிலையில் உள்ளது. ஏன் இன்னும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த விவகாரம் முடிவே இல்லாமல் சென்றுகொண்டிருக்கிறது என கேள்வி எழுப்பினார்.
மேலும் தொடர்ந்து பேசிய ஸ்டாலின், ஆளுநர் பதவி தேவையில்லாத ஒன்று. அதில் இன்னமும் திமுக உறுதியாக இருந்துவருகிறது என்றார் காட்டமாக.

















