இந்தியா
தமிழ்நாட்டுக்கு முன்னுரிமை அடிப்படையில் வழங்கும் மின்சாரத்தை நிறுத்தக்கூடாது – பொதுமக்கள் கோரிக்கை

கோடை காலத்தில் தீவிரமடைந்து வரும் வெப்ப அலை காரணமாக நாளுக்கு நாள் வெயில் சுட்டெரித்து வருகிறது. இதனால் பொதுமக்கள் வெளியில் நடமாடுவதைத் தவிர்ப்பதுடன் வெயிலுக்கு இதமான பானங்களை பருகுவது மின்விசிறி பயன்பாடு மற்றும் குளிர்பதனிகள் பயன்பாடு ஆகியவை அதிகரித்து வருகின்றன. இதனால் இந்தியாவின் உச்சபட்ச மின்சார தேவை நேற்று 2 லட்சத்து 56 ஆயிரம் மெகாவாட் என்ற வரலாறு காணாத அளவை எட்டி உள்ளது.
தொடர்ந்து வெப்பநிலை உயரத் தொடங்கியுள்ளதால் இந்த ஆண்டு கோடை காலத்தில் மின்சார நுகர்வு இன்னும் பல மடங்கு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ்நாட்டின் மின் தேவை புதிய உச்சமாக 21060 மெகாவாட்டாக உயர்ந்துள்ளதால் தமிழ்நாட்டில் அடுத்த மாதம் முதல் மாலை நேரத்தில் மின்சார பற்றாக்குறை ஏற்பட வாய்ப்பு உள்ளதாக மத்திய மின்துறை எச்சரிக்கை செய்துள்ளது.
இதனைத் தொடர்ந்து இந்தியாவில் ஒவ்வொரு மாநிலத்திலும் செயல்பட்டுவரும் மத்திய மின் உற்பத்தி நிலையங்களில் இருந்து அந்த மாநிலங்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் மின்சாரம் வழங்குவதை நிறுத்தி மத்திய மின் நிலையங்களில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் முழுவதையும் போட்டி ஏல அடிப்படையில் விலை நிர்ணயித்து விற்பனை செய்யவும் மத்திய மின் அமைச்சகம் முடிவ செய்திருக்கிறது.
மாநிலங்களின் உரிமையை பறிக்கும் இந்த முடிவை ஏற்க முடியாது. எந்த மாநிலத்திலும் செயல்பட்டுவரும் மின் உற்பத்தி நிலையங்கள் அந்த மாநிலத்தின் மின்வாரியத்திற்கு முன்னுரிமை அடிப்டையில் மின்சாரம் வழங்குவது சலுகை அல்ல. அது மாநிலங்களின் உரிமை. மத்திய மின் உற்பத்தி நிலையங்கள் அமைப்பதற்கான நிலத்தை மாநிலங்கள்தான் வழங்குகின்றன. மேலும் இந்த மின்னுற்பத்தி நிலையங்களால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்புகள். சுகாதார சீர்கேடுகள் உள்ளிட்ட அணைத்து பாதிப்புகளையும் அந்த மாநிலங்களைச் சேர்ந்த மக்கள்தான் அனுபவிக்கின்றனர். இவற்றால் ஏற்படும் ஆபத்துக்களையும் பாதிப்புக்களையும் தமிழ்நாடு போன்ற மாநிலங்கள் எதிர் கொள்ள வேண்டும். எனவே அவற்றின் உரிமைகளை மறுத்து மின்சாரத்தை அதிக விலைக்கு விற்பனை செய்து மின் உற்பத்தி நிலையங்கள் அதிக லாபம் ஈட்ட வேண்டும் என்ற நோக்கத்தில் ஒன்றிய அரசு செயல்படுவது கண்டிக்கத்தக்கது என்று சமூக ஆர்வர்களும் தமிழ்நாட்டு பொதுமக்களும் தெரிவித்து தங்களின் உரிமையை தங்களுக்கு தவறாது வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.













