இந்தியா
ஒரே நாடு ஒரே தேர்தல், ஒரே நாடு ஒரே மதம்… அப்போ… இப்போ ஒரே நாடு ஒரே கேஒய்சி…. ஆனா இது வந்தா நல்லாத்தான் இருக்கும்…

வங்கி மற்றும் நிதி நிறுவனங்கள் வாடிக்கையாளர்களின் அடையாளத்தையும் முகவரியையும் சரிபார்க்கும் கட்டாய நடைமுறையே இந்த கே.ஒய்.சி. நிதி மோசடி மற்றும் அடையாளத் திருட்டு போன்றவற்றை தடுப்பதற்காக நமது பான்கார்டு மற்றும் ஆதார்கார்டு போன்று அரசால் அங்கீக்கரிக்கப்பட்ட ஆவணங்கள் மூலம் இந்த நடைமுறை மேற்கொள்ளப்படுகிறது. இதற்கெல்லாம் பிறகு ஓடிபி என்ற ஒரு தொல்லை வேற. மோசடிப் பேர்வழிகளிடமிருந்து நமது பணத்தையும் ஆவணங்களையும் காப்பாற்ற எத்தனை வழிகளில்தான் போராடுறது….
வங்கிகளில் கணக்கு தொடங்க வேண்டுமா? கடன் பெற வேண்டுமா? மியுச்சுவல் ஃபண்ட் ல் முதலீடு செய்ய வேண்டுமா? புதிய சிம் கார்டு வாங்க வேண்டுமா? காப்பீட்டு பாலிசி எடுக்க வேண்டுமா? இப்படி ஒவ்வொன்றுக்கும் கே.ஒய்.சி. என்பது கட்டாயம். அவற்றில் ஏதாவது திருத்தம் நடந்தாலோ அல்லது நடைபெற்றாலோ மீண்டும் கே.ஒய்.சி. இப்போதெல்லாம் பெரிய முதலீட்டில் நகை வாங்கவும் கே.ஒய்.சி. தேவைப்படுகிறது.
இப்படி ஒல்வொன்றுக்கும் தனித்தனியாக கே.ஒய்.சி. நடைமுறை செய்வதில் உள்ள சிரமங்களை ஒழிக்கத்தான் இந்த ஒரே நாடு ஒரே கே.ஒய்.சி.
முதலீட்டாளர்களிடையே உள்ள குழப்பங்களுக்கு முடிவு கட்டவே ஒன்றிய அரசு இந்த திட்டத்தை முன்மொழிந்துள்ளது.
மும்பையில் செபி என்னும் இந்திய பங்குகள் பரிவர்த்தனை ஒழுங்குமுறை ஆணையத்தின் 38வது நிறுவன நாள் விழாவில் ஒன்றிய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்துகொண்டு பேசுகையில் இதன் தேவை பற்றி குறிப்பிட்டு பேசினார். இந்த திட்டத்தை அமல்படுத்துவதில் செபி முன்னிலை வகிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார். அவர் மேலும் பேசியதாவது
வங்கிக்கள் பரஸ்பர நிதி பங்குகள் பத்திரங்கள் மற்றும் காப்பீடு மற்றும் ஓய்வுதியங்கள் போன்ற ஒழுங்குபடுத்தப்பட்ட நிதிச் சேவைகளில் மீண்டும் கேஒய்சி நடைமுறை செய்வதைத் தவிர்ப்பதற்காக ஒரே ஒருங்கிணைந்த கேஒய்சி (உங்கள் வாடிக்கையாளரை அறிந்து கொள்ளுங்கள்) நடைமுறையை உருவாக்குவதில் ஒன்றிய அரசு நீண்ட காலமாக செயலாற்றி வருகிறது.
இருப்பினும் இது முழுமையாக செயல்பாட்டுக்கு வரவில்லை. செபி இதில் முன்னேறிச் சென்றிருந்தாலும் மற்ற ஒழுங்குமுறை அமைப்புகள் பின்தங்கியிருப்பதாக தெரிகிறது.
இதற்குத் தேவையான முதலீட்டாளர் பங்கேற்பு ஆழமான டிஜிட்டல் உள்கட்டமைப்பு மற்றும் சக ஒழுங்குமுறை அமைப்புகளிடையே நிறுவன ரீதியிலான நம்பகத்தன்மை ஆகியவை செபியிடம் உள்ளன. எந்த ஒரு குடிமகனும் பல்வேறு நிதித் தயாரிப்புகள் மற்றம் தளங்களில் ஒரே சரிபார்ப்பு பயணத்தை மீண்டும் மீண்டும் மேற்கொள்ள வேண்டியதில்லை என்பதை உறுதி செய்வது அணைத்துத் தரப்பினரின் கூட்டுப் பொறுப்பாகும். நாம் இது தொடர்பாக அவசரமாக கூட்டாகச் செயல்பட வேண்டியது கட்டாயமாகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.













