வணிகம்
அகவிலைப்படி, ஊதியக் குழு நன்மைகள் நீக்கம் செய்யப்படுமா? மத்திய அரசு ஓய்வூதிய விதிகளில் புதிய விளக்கம்!

மத்திய அரசு ஓய்வூதியதாரர்களுக்கான முக்கியமான விளக்கம் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. சமீபத்தில் சில ஊடகங்கள், இனி ஓய்வூதியதாரர்கள் அகவிலைப்படி (DA) உயர்வும், 8வது ஊதியக்குழு (8th Pay Commission) சலுகைகளும் பெற முடியாது என தவறான தகவல்களை பரப்பியுள்ளன. இதனால் ஓய்வூதியதாரர்கள் மற்றும் எதிர்கால ஓய்வுபெற விருப்பமுள்ள அரசு ஊழியர்கள் மத்தியில் மிகப்பெரிய குழப்பம் ஏற்பட்டுள்ளது.
இந்த தகவலுக்கு காரணமாக நிதிச் சட்டம் 2025 (Finance Bill 2025) மற்றும் அதனுடன் சேர்க்கப்பட்டுள்ள CCS (Pension) விதி 37(29C) இல் சமீபத்தில் செய்யப்பட்ட திருத்தமே. ஆனால் இந்த திருத்தம், மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி உயர்வோ, ஊதியக் குழு சலுகைகளோ தொடர்பானது அல்ல.
புதிய விதியின்படி, அரசு சேவையில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற பின்னர் பொதுத்துறை நிறுவனத்தில் பணியமர்ந்து, தவறான நடத்தைக்காக வேலைவிலக்காகும் ஊழியர்கள், தங்களுக்கான முந்தைய அரசு சேவையின் ஓய்வூதிய நலன்களை இழக்க நேரிடும். இதுவே தற்போது செய்யப்பட்ட மாற்றம்.
இதனை மையமாகக் கொண்டு, DA Hike மற்றும் Pay Commission Benefits பெற முடியாது என கூறும் செய்திகளுக்கு மத்திய அரசு மறுப்பு தெரிவித்துள்ளது. நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனும் நாடாளுமன்றத்தில் இதனைத் தெளிவுபடுத்தியுள்ளார். புதிய விதி, 1972ஆம் ஆண்டு அமலுக்கு வந்த வழிகாட்டுதல்களையே உறுதிப்படுத்துகிறது என்றும், சிவில் மற்றும் பாதுகாப்பு ஓய்வூதியங்களில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை என்றும் கூறியுள்ளார்.
மேலும், 7வது ஊதியக் குழுவின் பரிந்துரைகளில் இடம்பெற்ற ஓய்வூதிய சமத்துவம் (Pension Parity) தொடரும் என்றும், ஓய்வூதியதாரர்கள் இடையே எந்தவித பாகுபாடும் அமல்படுத்தப்படவில்லை என்றும் ஓய்வூதியத் துறை (DoPPW) தெரிவித்துள்ளது.















