தமிழ்நாடு
தேனியில் ஓபிஎஸ் மகன் வெற்றிக்கு 500 கோடி செலவு செய்யப்பட்டதா? பகீர் புகார்!

நேற்று நாடு முழுவதும் மக்களவை தேர்தல் முடிவுகள் வெளியானது. இதில் மத்தியில் பாஜக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடித்தது. ஆனால் தமிழகத்தில் திமுக கூட்டணி தேர்தல் நடந்த 39 தொகுதிகளில் 38 தொகுதியை கைப்பற்றியது. தேனி தொகுதியில் மட்டும் அதிமுக வேட்பாளர் வெற்றி பெற்றார்.
தேனியில் அதிமுக சார்பில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ஓ.பி.ரவீந்திரநாத் குமார் போட்டியிட்டார். அவரை எதிர்த்து திமுக கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனும், அமமுக சார்பில் தங்க தமிழ்செல்வனும் போட்டியிட்டனர். இதில் ஈவிகேஎஸ் இளங்கோவனை விட 76693 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றிபெற்றார் ரவீந்திரநாத். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அமமுக வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வன் 144050 வாக்குகள் பெற்று மூன்றாமிடம் பிடித்தார்.
இந்நிலையில் ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் வெற்றிக்கு அதிக அளவில் பணம் செலவழிக்கப்பட்டதாக பரவலாக பேசப்படுகிறது. இதனையடுத்து இன்று செய்தியாளர்களை சந்தித்த தங்க தமிழ்செல்வன், பன்னீர்செல்வம் மகனுக்காக 500 கோடி ரூபாய் வரை செலவழித்துள்ளனர். இது யாருடைய பணம். பன்னீசெல்வம் தந்தை ஓட்டக்காரத் தேவரிடம் அவ்வளவு பணம் இருந்ததா? 500 கோடி எப்படி செலவு செய்தார்கள் என்று அவர்களிடம் கேளுங்கள் என பற்ற வைத்துள்ளார்.














