இந்தியா
ஐடி சேவைத் துறையில் பெரும் அதிர்வலைகள் – ஒயிட் காலர் வேலையில் 50 % காணாமல் போகும்.

பங்குச் சந்தையில் கடந்த சில நாட்களாக பல முன்னணி ஐடி நிறுவனங்களின் பங்குகள் கடும் வீழ்ச்சியை சந்தித்து வருகின்றன.
செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பம் அசுர வேகத்தில் அனைத்து துறைகளிலும் தனது கரங்களை நீட்டித்து வருகிறது. அதை கோடிட்டுக் காட்டும் விதமாக அமெரிக்காவிலிருந்து அண்மையில் ஆந்த்ரோபிக் நிறுவனம் தனது புதிய கிளவுட் ஏஐ மாடலுக்கான கிளவுட் கோஒர்க் மற்றும் 11 புதிய பிளக்இன் களை அறிமுகம் செய்தது. இது நிறுவனங்களின் அணைத்து பணிகளையும் தானியங்கி மயமாக்கக் கூடிய வல்லமை படைத்தது.
ஒப்பந்தங்களை மதிப்பாய்வு செய்தல், நிதி மாதிரிகளை உருவாக்குதல், சட்ட விளக்கங்கள், சட்டஒப்பந்தங்கள், விற்பனை சந்தைப்படுத்தல் மற்றும் தரவு பகுப்பாய்வு போன்ற பணிகளை துல்லியமாக தானியங்கி மயமாக்கி செயல்படக்கூடியது.
இந்த பணிகளுக்காக ஐடி நிறுவனங்கள் பலபேரை வேலைக்கு வைத்து பல லட்சம் சம்பளம் கொடுத்து செய்து வரக்கூடிய நிலையில் இந்த புதிய ஆந்த்ரோபிக் ஏஐ இந்த பணிகளை சில நிமிடங்களில் செய்து முடித்து விடுவதாக கூறப்படுகிறது.
இதனால் சர்வதேச அளவில் மற்றும் இந்தியாவிலும் ஐடி நிறுவனங்களின் பங்குகள் சென்ற வாரம் கடும் சரிவை கண்டன.
டிசிஎஸ், இன்போசிஸ் எச்சிஎல், மகேந்திரா, விப்ரோ பங்குகளும் பெருமளவில் வீழ்ச்சி அடைந்தன. எச்சிஎல் நிறுவனர் ஷிவ்நாடாரின் சொத்து மதிப்பு 1 பில்லியன் டாலர் அளவுக்கு குறைந்தது. இந்த ஆந்த்ரோபிக்குடன் ஓபன் ஏஐ, சாட்ஜிபிடி, ஜெமினி, சர்வம் உள்ளிட்ட மற்ற ஏஐ நிறுவனங்களும் கடும் போட்டியில் ஈடுபடுவதால் ஐடி சேவைத்துறையின் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது.
இதனால் இதற்கு முந்தைய புரட்சிகளைக் காட்டிலும் ஏஐ யின் தாக்கங்கள் வேகமாகவும் அதிகமாகவும் இருக்கும். எனவே 50 சதவீதமான ஒயிட்காலர் வேலைகள் அடுத்த 5 ஆண்டுகளுக்குள் இல்லாமலே போய்விடும் என வல்லுநர்கள் கூறுகின்றனர்.


















