தமிழ்நாடு
அண்ணா பல்கலையின் புதிய துணைவேந்தர் யார்?

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக இருந்த சூரப்பா சமீபத்தில் ஓய்வு பெற்றார் என்பதும் அவர் மீது மோசடி குற்றச்சாட்டு காரணமாக விசாரணை நடந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் சூரப்பா ஓய்வு பெற்றதை அடுத்து அண்ணா பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தர் யார் என்ற கேள்வி தற்போது பல்கலைக்கழக நிர்வாகிகள் மத்தியில் எழுந்துள்ளது.
இந்த நிலையில் அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் பதவிக்கு விண்ணப்பித்த நபர்களுக்கு ஆகஸ்ட் 9ஆம் தேதி நேர்காணல் நடைபெற இருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது. நாடு முழுவதும் 160 பேர் இந்த பதவிக்காக விண்ணப்பித்து இருப்பதாகவும் அதில் 10 பேரை தேர்வு செய்து நேர்முகத் தேர்வுக்கு தேடல் குழு உறுதி செய்துள்ளதாகவும் தகவல் வெளிவந்துள்ளது.
அண்ணா பல்கலைக்கழக பேராசிரியர்கள் 5 பேர், சென்னை ஐஐடி பேராசிரியர்கள் இருவர், உள்பட 10 பேருக்கு நேர்காணலுக்கான தகவல் அனுப்பப்பட்டுள்ளதாகவும் அவர்களிடம் நேர்காணல் செய்து அவர்களில் ஒருவரை அண்ணா பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தராக தேர்வு செய்யப்படுவார் என்றும் கூறப்பட்டு வருகிறது.
அண்ணா கழகத்தின் புதிய துணைவேந்தராக சர்ச்சைக்கு இடமில்லாத வகையில் ஒருவரை நியமனம் செய்ய வேண்டும் என பல்கலைக்கழக நிர்வாகிகள் மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.



















