உலகம்
டன் கணக்கில் புதுத்துணிகளை பாலைவனத்தில் கொட்டிய வணிகர்கள்: என்ன காரணம்?

துணி உற்பத்தியாளர்கள் டன் கணக்கில் புது துணிகளை பாலைவனத்தில் குப்பை போல் கொட்டி விட்டுச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சிலி நாட்டில் உள்ள அடகாமா என்ற பாலைவனத்தில் சமீபத்தில் ஆயிரக்கணக்கான டன் புதுதுணிகள் குப்பை குவியலாக கண்டெடுக்கப்பட்டது. இதனால் சிலி நாட்டின் அதிகாரிகள் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.
பாலைவனத்தில் டன் கணக்கில் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் துணி உற்பத்தியாளர்கள் வந்து கொட்டி விட்டு சென்றது குறித்து முதல் கட்ட விசாரணையில் தெரியவந்தது.
இது குறித்து மேலும் விசாரணை செய்தபோது அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் இருந்து வரி செலுத்தாமல் இறக்குமதி செய்த துணிகளை வருமானவரித்துறை ரெய்டுக்கு பயந்து வணிகர்கள் பாலைவனத்தில் கொட்டி விட்டு சென்றதாக கூறப்படுகிறது.
இவ்வாறு பாலைவனத்தில் புது துணிகளை டன் கணக்கில் கொட்டி விட்டுச் சென்றவர்கள் யார் என்பதை கண்டுபிடிக்கும் முயற்சியில் இருப்பதாக சிலி நாட்டின் அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பாலைவனத்தில் புதுத்துணிகள் குப்பை குவியலாக இருக்கும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையதளங்களில் வைரலாகி வருகிறது.












