செய்திகள்
அரசுப் போட்டித் தேர்வுகளுக்கு பயிற்சி பெற டிசம்பர் 22ம் தேதி முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

தமிழ்நாடு அரசு போட்டித் தேர்வுகள் பயிற்சி மையம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது
டிஎன்பிஎஸ்சி மற்றும் எஸ்எஸ்சி, ஐபிபிஎஸ், ஆர்ஆர்பி ஆகிய முகமைகள் நடத்தும் போட்டித் தேர்வுகளில் கலந்து கொள்ளும் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஆர்வலர்களுக்கு தமிழ்நாடு அரசின் சார்பில் இயங்கும் போட்டித் தேர்வுகள் பயிற்சி மையங்களான சென்னை பழைய வண்ணாரப்பேட்டையில் உள்ள சர்.தியாகராயர் கல்லூரி வளாகத்தில் 500 ஆர்வலர்களுக்கும் சேப்பாக்கத்தில் உள்ள மாநிலக் கல்லூரி வளாகத்தில் 300 ஆர்வலர்களுக்கும் கட்டணமில்லா பயிற்சிகள் வழங்கப்படுகிறது.
இந்த பயிற்சி வகுப்புகளுக்கு இணைய வழியாக விண்ணப்பங்கள் பெற்று சேர்க்கை நடைபெற உள்ளது. பயிற்சி வகுப்புகள் பிற்பகல் 2 மணி முதல் 5மணி வரை ஆறு மாத காலம் வாராந்திர வேலை நாட்களில் நடைபெற உள்ளது. பயிற்சி வகுப்புகளில் சேர விரும்புவோர் குறைந்தபட்சம் 10 ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருப்பதோடு வரும் 1ம் தேதி 18 வயது புர்த்தி செய்திருக்க வேண்டும். இந்த பயிற்சி மையங்களில் உணவு மற்றும் தங்கும் வசதிகள் இல்லை.
பயிற்சியில் சேர விரும்பும் ஆர்வலர்கள் www.cecc.in என்ற இணையதளம் வாயிலாக 22.12.2025 முதல் 05.01.2026 வரை விண்ணப்பிக்கலாம். பயிற்சி வகுப்புகளில் சேர்க்கை தொடர்பான கூடுதல் விவரங்களை மேற்குறிப்பிட்ட இணையதள முகவரியில் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.
மேலும் விவரங்களுக்கு 044-25954905 மற்றும் 044-28510537 ஆகிய தொலைபேசி எண்களைத் தொடர்பு கொள்ளலாம்.
பத்தாம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் தமிழக அரசால் நடைமுறைப் படுத்தப்பட்டுள்ள இனவாரியான இடங்களுக்கு ஏற்ப ஆர்வலர்கள் தேர்வு செய்யப்பட்டு தேர்வர்களின் விவரங்கள் மேற்குறிப்பிட்ட இணையதளத்தில் வெளியிடப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.







