இந்தியா
எழுபது வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கு நகைக் கடன் கிடையாது தெரியுமா?

ஒரு தேசியமயமாக்கப்பட்ட வங்கிக்கு போயிருந்தேன். கூட்டம் அவ்வளவாக இல்லை. இருந்த கூட்டமும் மௌனமாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது. வங்கியின் மேலாலருக்கும் நகைக் கடன் வாங்க வந்த ஒரு சம்சாரிக்குமான உரையாடல். எழுபது வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கு நகைக் கடன் கிடையாதாம்.
“இங்க கேளுங்க சார் உங்கள் வங்கியில்தான் இத்தனை வருஷமாக கணக்கு வைத்து வரவு செலவு வைத்திருக்கிறேன்.நகைக்கடன் இல்லை என்றால் எப்படி”
“எழுபது வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கு நகைக்கடன் கொடுக்கக் கூடாது என்று ரிசர்வ் வங்கியோட உத்திரவு நான் நினைச்சாலும் கொடுக்க முடியாது.உங்கள் ஆதார் கார்டில் பிறந்த தேதி இருக்கிறது.கம்யூட்டர் நிராகரிக்கும்”
“காரணம் என்னனு சொல்லுங்க சார்.என்னோட நகை.கணக்கு இதே வங்கியில் இருக்கு.வங்கியின் விதிகளுக்கு உட்பட்டுத்தான் நகைக் கடன் கேட்கேன். எத்தனை ப்ரசண்ட் லெஸ் பண்ணனுமோ பண்ணிக்கோங்க”
“காரணத்தையெல்லாம் யாருய்யா சொல்றா. ஆர்டர் வருது அதன்படிதான் நாங்க நடக்கணும். என்ன எதுக்குன்னு கேட்க முடியாது”
“எழுபது வயதாகிருச்சு செத்துப் போயிருவார்னு நெனைக்கீங்க. அப்பிடிதானே சார்”
“காரணம் தெரியலய்யா”
“வேறு என்ன காரணம் இருக்க முடியும். நகைக்கடன் வாங்கிட்டுப் போன முப்பது நாப்பது வயசுக்காரங்க செத்துப் போனா என்ன செய்வீங்க. கடனை தள்ளுபடி பண்ணிட்டு நகைகளை குடுத்திருவீகளா. டெத் சர்ட்பிகேட் வாரிசு சர்ட்பிகேட் தோளாந்துருத்திய வாங்கிக்கிட்டு வட்டியும் முதலும் வாங்கிக்கிட்டு தான நகைகளை குடுக்குறீங்க .அது மாதிரிதான எழுபது வயசுக்காரன் செத்தாலும்”
வங்கியின் மேலாளர் பதில் சொல்ல இயலாமல் மௌனமாகிவிட்டார். சம்சாரி புலம்புகிறார்.
“எல்லாம் என்ன காரணம்னா கந்து வட்டிக்காரன் கிட்ட போ அடகுக் கடைக்குப் போ அநியாய வட்டி கட்டி சாகு. போர்டு மட்டும் மூலை மூலைக்கு விளம்பரம். “இது உங்கள் வங்கி.உங்கள் வாழ்க்கையை மேம்படுத்தும் வங்கி”
அந்த சம்சாரி கோபத்துடனும் வருத்தத்துடனும் வெளியே போகிறார். வங்கிகளில் எழுபது வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கு நகைக் கடன் கிடையாது என்கிற விஷயம் எனக்கு இன்றைக்குக் தான் தெரிந்தது.
குறிப்பு: ரிசர்வ் வங்கி இந்த உத்திரவை உடனே திரும்ப பெற வேண்டும். நகைக்கடன் பெறுவதற்கு என்ன வயது வரம்பு. இரண்டு லட்ச ரூபாய் பெறுமானம் உள்ள நகைக்கு ஒன்றரை லட்சம் தானே கடன் தருகிறீர்கள்.

















