ஆன்மீகம்
பூட்டிய கதவிற்கே பூசை… உடைக்காத தேங்காய் உரிக்காத வாழைப்பழம் நெய் மட்டுமே நைவேத்தியம்.. எந்த கோயிலில் தெரியுமா???

இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் செயல்பட்டு வரும் இந்தக் கோயிலில் மூலவராக சிலைகளையோ படங்களையோ இல்லாமல் பூட்டிய கதவிற்கு பூசை செய்து மக்கள் வழிபட்டுவரும் இந்தக் கோயிலை கதவுக்கோயில் என்றே மக்கள் அழைக்கின்றனர். மூடிய கதவிற்கு முன் ஐந்துதலை நாகத்தின் பொற்சிலை முன் ஒரு திரிசூலம் அமைக்கப்பட்டு அம்மனாக வழிபடப்படுகிறது. அந்தக் கோயில் மூங்கிலணை காமாட்சி அம்மன் கோயில் என அழைக்கப்படுகிறது.
தேனி மாவட்டத்தின் முக்கிய சுற்றுலாத் தளமான இந்த கோயில் தேனி மாவட்டம் தேவதானப்பட்டி என்ற ஊரிலிருந்து 5 கி.மீ. தொலைவில் மஞ்சலாற்று கரையில் அமைந்தள்ளது. இந்த கோயில் திண்டுக்கல்லிலிருந்து வத்தலக்குண்டு வழியாகவும் மதுரையிலிருந்து தேனி செல்லும்போது பெரியகுளத்திற்கு சற்று முன்னால் தேவதானப்பட்டி என்ற ஊரிலிருந்து வடக்கே 5 கிமீ தொலைவில் உள்ளது.
வங்கிசபுரி என்ற பகுதியை ஆண்டு வந்த வச்சிரதந்தன் என்ற அரக்கன் காஞ்சனம் என்ற காட்டுப் பகுதியில் இருந்த தவசிரேஷ்டர்களையும் வேத விற்பன்னர்களையும் கொடுமைப்படுத்தி வந்தான். அவனை அழிக்க காஞ்சிபுரத்திலிருந்து வந்த காமாட்சி அம்மன் துர்க்கையின் துணையுடன் அவனை அழித்த பிறகு சிறு வயது பெண்ணாக இந்த காட்டு பகுதியில் உருவெடுத்து சிவனை நோக்கி தவமிருந்தாள். அம்மனின் பாவம் நீங்க சப்த கன்னியர்கள் தெய்வப் பெண்கள் துர்க்கை அணைவரும் சேர்ந்து 1008 குடங்களில் நீரெடுத்து வாசனைத் திரவியங்கள் மஞ்சள் சேர்த்து அபிஷேகம் செய்த மஞ்சள் நீர் கலந்ததால் வேகவதியாறு மஞ்சலாறு என பெயர் பெற்றது. அசுரனது தலையை மிதித்த இடம் தலையாறு எனவும்இ மூளை சிதறிப்போய் விழுந்த இடம் மூளையாறு எனவும் குலைகாய் ஈரல் விழுந்த இடம் குலையூத்து எனவும் உடல் குறுக்காக விழுந்த இடம் குறுக்குமலை எனவும் பெயர்பெற்றன.
இந்த இடம் தெய்வங்களை வழிபட பாண்டிய மன்னனால் தானமாக அளிக்கப்பட்டதால் “தெய்வதானப்பதி“ என அழைக்கப்பெற்று இன்று தேவதானப்பட்டி என அழைக்கப்படுகிறது. அம்மன் அசரீரியாக அளித்த வாக்குப்படி ஆற்றில் மிதந்து வந்த மூங்கில் பெட்யை மூங்கில்களைக் கொண்டு தடுத்து அணயிட்டு கொண்டு வந்து வழிபாடு செய்யப்படுவதால் மூங்கிலணை காமாட்சி அம்மன் என்ற பெயர் ஏற்பட்டது. இந்த கோயில் பூசை பொறுப்பு கவனித்து வந்த மன்னாடியார்களுக்கும் ஜமீன்தாரருக்கும் நிலத்திற்கு தண்ணீர் பாய்ச்சுவதில் ஏற்பட்ட தகராறில் கோபம் கொண்ட மன்னாடியார் கோயில் கதவைப் பூட்டியதுடன் நான் அடைத்த கதவு என்றும் திறக்கக் கூடாது. என்று சொல்லி விட்டுச் சென்றார். அன்றிலிருந்து இன்று வரை பூட்டிய கதவு திறக்கப்படுவதில்லை. உள்ளே உள்ள காமாட்சிப் புல்லால் வேயப்பட்ட கோயிலின் குச்சுவீடு மேல் அமைக்கப்பட்ட கலசத்தைக் காண வடக்குப் பிராகாரத்தில் ஒரு மேடை அமைக்கப்பட்டுள்ளது.
தை மாத ரதசப்தமியன்று காமக்காள் திவசம் என்று ஒரு நிகழ்வு நடத்தப்படுகிறது. மகாசிவராத்திரி ஆடிப்பள்ளயம் சித்திரை வருடப்பிறப்பு விஜயதசமி கார்த்திகைத்திருநாள் தைப்பொங்கல் ஆகிய விழாக்காலங்களிலும் சிறப்ப வழிபாடுகள் செய்யப்படுகிள்றன.
இங்கு தேங்காய் உடைக்கப்படுவதில்லை. வாழைப்பழம் உரிக்கப்படுவதில்லை. அன்ன நைவேத்தியம் செய்யப்படுவதில்லை. நெய்விளக்கு தீபம் மட்டுமே ஏற்றப்படுகிறது. இந்த கோயிலில் பக்தர்களிடம் காணிக்கையாகப் பெறப்படும் நெய் ஊற்றி வைக்கப்பட்டுள்ள மண்பானைகளில் எறுப்பு ஈ வண்டு மொய்ப்பதுமில்லை. வருடத்திற்கு ஒரு முறை கோயிலின் குச்சுவீடு கலசத்திற்கு கூரை வேயப்படும்போது ராஜகம்பளம் சாதியினர் தங்கள் கண்களைத் துணியால் கட்டிக் கொண்டுதான் காமாட்சிப்புல்லால் கூரை வேய்கின்றனர். காஞ்சிபரம் காமாட்சி அம்மன் கோயில் போன்றே இங்கு பூசை மண்டபத்தின் முன்பு கௌலி (பல்லி) யின் சின்னம் பொறிக்கப்பட்டுள்ளது. இங்கு கௌலி குறி கேட்டல் முக்கியமான ஒன்றாக உள்ளது. இவ்வளவு சிறப்பம்சங்கள் கொண்ட இந்த கோயிலுக்கு ஒரு முறை சென்று அம்மனின் அருள் பெற்றுத்தான் வாருங்களேன்….

















