ஆன்மீகம்
மதுரை சித்திரைத் திருவிழா: வைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர்: இலட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம்!

சித்திரை திருவிழா கடந்த 23 ஆம் தேதி மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் கொடியேற்றத்துடன் கோலாகலமாகத் தொடங்கியது. அன்று முதல் தினந்தோறும் மீனாட்சி அம்மனும், சுந்தரேசுவரரும் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி, மாசி வீதிகளில் வலம் வந்து லட்சக்கணக்கான பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான மீனாட்சி-சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் கடந்த மே மாதம் 2 தேதி காலையில் வெகுவிமரிசையாக நடந்தது.
மதுரை அழகர் கோவில்
மதுரை அழகர் கோவிலில் சித்திரைத் திருவிழா கடந்த மே மாதம் 1 ஆம் தேதி தொடங்கி நடந்து வருகிறது. இதில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்குவது உலகப் புகழ்பெற்ற சிறப்பு நிகழ்ச்சியாகும். இந்த நிகழ்ச்சிக்காக நேற்று முன்தினம் மாலை 5.50 மணிக்கு கள்ளழகர் தங்கப் பல்லக்கில் மதுரைக்கு புறப்பட்டார்.
வைகையில் கள்ளழகர்
நேற்று (4 ஆம் தேதி) மூன்று மாவடியில், மதுரை மக்கள் கள்ளழகரை எதிர் கொண்டு வரவேற்கும் எதிர் சேவை சிறப்பாக நடைபெற்றது. தொடர்ந்து பல்வேறு மண்டகப்படிகளில் எழுந்தருளிய கள்ளழகர், இரவில் தல்லாகுளத்தில் இருக்கும் பெருமாள் கோவிலை அடைந்தார். விடிய விடிய கள்ளழகருக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் அலங்காரம் நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து இன்று அதிகாலையில், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் சூடிக் கொடுத்த மாலையை கள்ளழகர் சூடி, தல்லாகுளம் கருப்பணசாமி கோவிலுக்கு வந்து, தங்கக் குதிரையில் அமர்ந்து ஆயிரம் பொன் சப்பரத்தில் கள்ளழகர் எழுந்தருளி அருள் பாலித்தார். இன்று காலை 5.45 மணி முதல் 6.12 மணிக்குள் தங்கக் குதிரை வாகனத்தில் கள்ளழகர் வீற்றிருந்து வைகை ஆற்றில் இறங்கினார்.
கோவிந்தா… கோவிந்தா…
ஆழ்வார்புரம் மற்றும் வடகரை பகுதியில் தங்கக் குதிரை வாகனத்தில் கள்ளழகர் எழுந்தருளி பவனி வந்தார். கோவிந்தா… கோவிந்தா… என்ற கோஷத்துடன் இலட்சக்கணக்கான பக்தர்கள் கள்ளழகரை வணங்கி வழிபட்டனர். பச்சை பட்டு உடுத்தி தங்க குதிரை வாகனத்தில் எழுந்தருளி, வைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர். வெள்ளிக் குதிரையில் வீரராகப் பெருமாள் கள்ளழகரை வரவேற்றார்.
காலை 7.25 மணி வரை கள்ளழகர் வைகை ஆற்றில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். இந்த கண்கொள்ளா காட்சியை கண்டு தரிசிப்பற்கு தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பல இலட்சம் பக்தர்கள் மதுரை மாநகரில் குவிந்தனர். இதனால் மதுரை மாநகரம் விழாக் கோலத்துடன் காட்சி அளிக்கிறது.