ஆரோக்கியம்
பழம் எப்போது சாப்பிடலாம்..? – உணவுக்கு முன்பா, பின்பா?
உடல் ஆரோக்கியத்துக்கு தினமும் பல வகை பழங்களைச் சாப்பிட வேண்டும். அதே நேரத்தில் நீரிழிவு நோயினால் அவதிப்படுபவர்கள் மற்றும் உடல் எடைக் குறைப்பில் ஈடுபட்டிருப்பவர்கள் பழங்களைச் சாப்பிடுவதில் தனிக் கவனம் எடுத்துக் கொள்ள வேண்டும். ஏன் என்றால் உடலில் உள்ள சர்க்கரையின் அளவை பழங்கள் அதிகரிக்கக்கூடும்.
அதே நேரத்தில் பழத்தின் முழு பலனை எப்போது சாப்பிட்டால் பெறலாம்? இது குறித்து பிரபல ஊட்டச்சத்து நிபுணர் பூஜா மகிஜா கூறியதாவது:-
பழங்களில் மிக அதிக ஊட்டச்சத்துகள் நிரம்பி இருக்கின்றன. அதில் வைட்டமின்கள், மினரல்கள், ஆன்டி-ஆகிசிடன்ட் உள்ளிட்ட உடலுக்குத் தேவையான பொருட்கள் இருக்கின்றன. அதே நேரத்தில் உணவுக்குப் பின் பழத்தைச் சாப்பிடுவது என்பது சரியான விஷயம் அல்ல. காரணம் பிரதான உணவின் புரதம், கார்ப்ஸ் மற்றும் கொழுப்புச் சத்துகளுடன் பழத்தின் சத்துகள் கரைந்து விடும். இதனால் பழங்களின் மூலம் மேலும் உடல் சர்க்கரை அளவு அதிகரிக்கவே செய்யும்.
பழங்களைப் பொறுத்தவரை அவற்றைச் சாப்பாட்டுடன் சாப்பிடாமல் தனியாக சாப்பிடுவது தான் அதிக பலனைக் கொடுக்கும். அப்படிச் சாப்பிடுவதன் மூலம் ஊட்டச்சத்துகள் அனைத்தும் உடலுக்குக் கிடைத்து, பசியையும் போக்கும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.