இந்தியா
நாசாவின் திட்டத்திற்கு தலைமை தங்கிய இந்திய வம்சாவளி பெண்.. சாதனை படைத்த ஸ்வாதி மோகன்

செவ்வாய் கிரகத்திற்கு ஆய்வு மேற்கொள்ள நாசா அனுப்பிய பெர்சவரன்ஸ் ரோவர் இன்று அதிகாலை வெற்றிகரமாக செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பில் தரையிறங்கியுள்ளது. இந்த திட்டத்தின் வழிநடத்துக் குழுவிற்கு தலைமை தாங்கியவர் இந்திய வம்சாவளியை சேர்ந்த ஸ்வாதி மோகன் என்பது தெரியவந்துள்ளது.
அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா செவ்வாய் கிரகத்திற்கு ஆராய்ச்சி பணிகளை மேற்கொள்ள கடந்த 1997 ஆம் ஆண்டு முதல் ரோவர்களை அனுப்பி வருகிறது. இதுவரை 5 ரோவர் வரை நாசாவால் செவ்வாய் கிரகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது. அதில் ஒவ்வொரு முறையும் புதிய கண்டுபிடிப்புகள் கிடைக்கப்பெற்றவுடன் அதன் அடுத்த வடிவத்திலான ரோவர்களை நாசா அனுப்பும்
அந்தவகையில் கடந்த 2012 ஆம் ஆண்டு கியூரியாசிட்டி என்கிற அதிநவீன ரோவரை நாசா செவ்வாய் கிரகத்திற்கு அனுப்பியது. அதன் மூலம் அங்கு பல ஆண்டு காலத்திற்கு முன்பு ஆறுகள் ஓடியதற்கான தடயங்கள் இருப்பது கண்டறியப்பட்டது. இதனால் கியூரியாசிட்டியை விட மேம்படுத்தப்பட்ட அதிநவீன பெர்சிவரன்ஸ் எனும் ரோவரை கடந்தாண்டு ஜூலை 30 அன்று நாசா அனுப்பியது.

இது செவ்வாயில் ஒரு மார்ஸ் ஆண்டுகளை அங்கு செலவழிக்கும், பூமியில் அது இரண்டு வருடமாகும். ரோவர் பண்டைய நுண்ணுயிர் வாழ்வின் அறிகுறிகளைத் தேடும், இது செவ்வாய் கிரகத்தின் வாழ்விட வரலாற்றை ஆராய நாசாவின் பணியை முன்னேற்றும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Also Read: செவ்வாய் கிரகத்தில் நாசாவின் விண்கலம்: இந்திய பெண் விஞ்ஞானிக்கு குவியும் பாராட்டு
ஒரு சிறிய கார் அளவில் இருக்கும் இந்த பெர்சவரன்ஸ் ரோவர் அங்கு பல்வேறு ஆராய்ச்சி பணிகளை மேற்கொள்ள உள்ளது. இதுவரை அனுப்பிய ரோவர்களில் மிக அதிக வேகத்தில் செல்லக்கூடியது இந்த பெர்சிவரன்ஸ் ரோவர். மேலும் செவ்வாயின் மேற்பரப்பில் துளையிட்டு ஆராய்ச்சி பணிகளை மேற்கொண்ட பிறகு அந்த துகள்களை மேற்பரப்பில் முத்திரையிடப்பட்ட குழாய்களில் சேமித்து வைக்கும்.
இது நாசா அடுத்து 2026 அல்லது 2028 ஆம் ஆண்டுகளில் ஐரோப்பிய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்துடன் இணைந்து திட்டமிட்டுள்ள செவ்வாயில் இருந்து மாதிரிகளை கொண்டுவருவதற்கான திட்டத்திற்கு பெரிதும் பயன்படும் என தெரிகிறது. இந்த நிலையில் தான் இந்த பெர்சிவரன்ஸ் திட்டத்தின் வழிநடத்துக் குழுவிற்கு தலைமை தாங்கியவர் இந்திய வம்சாவளியை சேர்ந்த பெண் என்பது தெரியவந்துள்ளது.
யார் இந்த ஸ்வாதி மோகன் ?
நாசாவின் இணையத்தில் இருக்கும் தகவல்களின் படி, ஸ்வாதி மோகன் தன்னுடைய ஒரு வயதில் இந்தியாவில் இருந்து அமெரிக்கா சென்று குடிபெயர்ந்தார். அவர் வடக்கு வர்ஜீனியா-வாஷிங்டன் டிசி மெட்ரோ பகுதியில் வளர்ந்தார், பின்னர் மெக்கானிக்கல் & ஏரோஸ்பேஸ் இன்ஜினியரிங் கார்னெல் பல்கலைக்கழகத்தில் பி.எஸ். பட்டம் பெற்றார்.
அதன் பின்னர் ஏரோநாட்டிக்ஸ் / ஆஸ்ட்ரோநாட்டிக்ஸ் பிரிவுகளில் எம்.எஸ் மற்றும் பி.எச்.டி பட்டங்களை எம்.ஐ.டி பல்கலைக்கழகத்தில் பெற்றார். அதை தொடர்ந்து, சனி கிரகத்திற்கு விண்கலன் அனுப்பும் காசினி மற்றும் நிலவுக்கு இரண்டு விண்கலங்களை அனுப்பிய கிரெயில் என பல்வேறு திட்டங்களில் பணியாற்றிய அனுபவம் உடையவர்.
ஸ்வாதி மோகன் பெர்சிவரன்ஸ் திட்டத்தின் ஆரம்பகாலத்தில் இருந்தே 2013 ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வருகிறார். 2020 மார்ஸ் திட்டத்தின் வழிகாட்டுதல் மற்றும் கட்டுப்பட்டு குழுவுக்கு தலைமை தாங்கினார். இந்த திட்டத்தின் வளர்ச்சி பணிகளின் போது இவர் சிஸ்டம் இன்ஜினியராக செயல்பட்டார். வழிகாட்டுதல், ஊடுருவல் மற்றும் கட்டுப்பாடுகள் மற்றும் திட்டத்தின் மற்ற அணிகளுக்கு இடையேயான முக்கிய தொடர்பாளராக ஸ்வாதி செயல்பட்டார். தற்போது, பசடேனாவில் உள்ள நாசாவின் ஜெட் ப்ராபல்ஷன் ஆய்வகத்தில் பணிபுரிகிறார்.

















