வணிகம்
உங்கள் ஆதார் கார்டு பயன்படுத்தி எத்தனை சிம் கார்டு வாங்கப்பட்டுள்ளது.. தெரிந்துகொள்வது எப்படி?
ஆதார் இன்று இந்தியர்களுக்கு தவிர்க்க முடியாத ஒரு ஆவணமாக உள்ளது. வங்கி கணக்கு திறப்பது, அரசு நலத் திட்டங்களைப் பெறுவது என பல்வேறு வற்றுக்கு ஆதார் கார்டு முக்கியமான ஒரு ஆவணமாக உள்ளது.
இப்படிப்பட்ட ஒரு ஆவணத்தைச் சிலர் தவறாகவும் பயன்படுத்த வாய்ப்புகள் உள்ளது. அதுவும் சிம் கார்டு ஒன்றை உங்கள் ஆதார் விவரங்கள் வழங்கி வாங்கிவிட்டு அதனை தவறாகப் பயன்படுத்தத் தொடங்கிவிட்டால் அது மிகப் பெரிய சிக்கலை உங்களுக்கு ஏற்படுத்தும்.
எனவே உங்கள் ஆதார் விவரங்களைப் பயன்படுத்தி எத்தனை சிம் கார்டுகள் பயன்பாட்டில் உள்ளது என தெரிந்துகொள்ளும் சேவை ஒன்றைத் தொலைத்தொடர்புத் துறை அறிமுகம் செய்துள்ளது.
இதன் மூலம் யாராவது உங்கள் ஆதார் விவரங்களை தவறாகப் பயன்படுத்தி சிம் கார்டுகள் வாங்கி இருந்தால், அதிலிருந்து உங்களைத் தற்காத்துக்கொள்ள முடியும்.
ஒருவர் பெயரில் எத்தனை சிம் கார்டுகள் வாங்க அனுமதி?
2018-ம் ஆண்டு தனிநபர் ஒருவரின் பெயரில் 18 மொபைல் எண்கள் வரை பெற தொலைத்தொடர்புத் துறை அனுமதி வழங்கியது. அதில் 9 நபர்கள் தனிப்பட்ட மொபைல் எண்ணிற்காகவும், 9 எண்கள் மெஷின் – மெஷின் பயன்பாட்டுக்காகவும் வாங்க முடியும்.
உங்கள் ஆதார் கார்டு பயன்படுத்தி எத்தனை சிம் கார்டு வாங்கப்பட்டுள்ளது என தெரிந்துகொள்வது எப்படி?
படி 1: tafcop.dgtelecom.gov.in செல்லவும்
படி 2: மொபைல் எண்ணை உள்ளிட்டு ஒரு முறை கடவுச்சொல்லைப் பெறுங்கள்
படி 3: உங்கள் மொபைல் எண்ணிற்கு வந்த ஒரு முறை கடவுச்சொல்லை உள்ளிட்டு சரிபார்க்கவும்.
படி 4: பின்னர் உங்கள் ஆதார் எண்ணைப் பயன்படுத்தி எத்தனை சிம் கார்டுகள் பெறப்பட்டுள்ளது என்ற விவரங்களைப் பெற முடியும்.
ஒருவேலை இங்கு உங்களுக்கு தெரியாமல் ஏதேனும் மொபைல் எண் பயன்பாட்டில் இருந்தால் அதை அங்கு உள்ள தெரிவுகளைப் பயன்படுத்தி புகாரும் அளிக்கலாம். அதன் மூலம் அந்த மொபைல் எண்ணின் சேவை துண்டிக்கப்படும்.