தமிழ்நாடு
எடப்பாடியார் போட்ட வழக்கு… நீதிமன்றத்தில் நேரில் ஆஜரான ஸ்டாலின்… பரபரத்த திமுக!

தமிழக எதிர்க்கட்சித் தலைவரும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவருமான மு.க.ஸ்டாலின் இன்று சென்னையில் இருக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்காக நேரில் ஆஜரானார்.
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ஆகியோருக்கு எதிராக சில வாரங்களுக்கு முன்னர் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கடுமையாக விமர்சனங்களை முன் வைத்தார் ஸ்டாலின். குறிப்பாக முதல்வரை சாடி வன்மையாக கண்டித்திருந்தார். இதனால் கொதிப்படைந்த அதிமுகவின் தலைமை, ஸ்டாலினுக்கு எதிராக பல இடங்களில் புகார் கொடுத்தன. இதைத் தொடர்ந்து 6 இடங்களில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. முதல்வர் பழனிசாமி மற்றும் அமைச்சர் வேலுமணிக்கு எதிராக அவதூறு பரப்பும் வகையில் ஸ்டாலின் பேசியதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கு குறித்தான விசாரணை இன்று சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இதைத் தொடர்ந்து ஸ்டாலின் நேரில் ஆஜரானார். இப்படி ஸ்டாலின் வருவதையொட்டி நீதிமன்ற வளாகம் முழுவதும் குவிந்த திமுகவினர், முதல்வருக்கு எதிராகவும் அதிமுகவுக்கு எதிராகவும் கோஷங்கள் இட்டனர்.




















