தமிழ்நாடு
ஓபிஎஸ் தாயார் மரணம்: டிடிவி தினகரன், முதல்வர் ஸ்டாலின் இரங்கல்!

முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் தாயார் பழனியம்மாள் நாச்சியார் தனது 95 வது வயதில் நேற்று இரவு இயற்கை எய்தினார். இவரது மறைவுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

#image_title
கடந்த 23-ஆம் தேதி ஓபிஎஸ் தாயார் உடல்நலக் குறைவு காரணமாக தேனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரை நேரில் சென்று சந்தித்து மருத்துவர்களிடம் விசாரித்துவிட்டு சென்னை திரும்பினார் ஓபிஎஸ். இந்நிலையில் மருத்துவர்களின் தொடர் சிகிச்சையில் இருந்த அவரது தாயார் நேற்று இரவு சிகிச்சை பலனின்றி இயற்கை எய்தினார். இந்த மறைவு செய்தியை கேட்ட ஓபிஎஸ் மீண்டும் சென்னையில் இருந்து தேனி பெரியகுளத்துக்கு விரைந்தார்.
இதனையடுத்து தமிழக அரசியலில் முக்கிய தலைவர்களில் ஒருவரான ஓபிஎஸ் உடைய தாயார் மறைவுக்கு தலைவர்கள் பலரும் தங்கள் இரங்கலை தெரிவித்து வருகின்றனர். தமிழக முதல்வர் ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில், ‘முன்னாள் முதலமைச்சர் அண்ணன் ஓ.பன்னீர்செல்ல்வம் அவர்களின் தாயார் பழனியம்மாள் அவர்கள் உடல்நலக்குறைவின் காரணமாக மறைவெய்தினார் என்றறிந்து மிகவும் வேதனையடைகிறேன். ஆளாக்கிய அன்னையை இழந்து தவிக்கும் பன்னீர்செல்வம் அவர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்’ என்று தெரிவித்துள்ளார்.
அதேப்போல அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனது டுவிட்டர் பக்கத்தில், ‘முன்னாள் முதலமைச்சரும், சட்டப்பேரவை எதிர்கட்சித் துணைத்தலைவருமான திரு.ஓ.பன்னீர் செல்வம் அவர்களின் தாயார் பழனியம்மாள் காலமான செய்தி அறிந்து அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன். அவரது மறைவால் வாடும் திரு.ஓ.பன்னீர் செல்வம் மற்றும் அவரது சகோதரர் உள்ளிட்ட உறவினர்கள், குடும்பத்தினர், நண்பர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கின்றேன்’ என தெரிவித்துள்ளார்.