வணிகம்
புதிய தொழிலாளர் விதிகள்: அமைப்புசாரா தொழிலாளர்களுக்கும் சமூக பாதுகாப்பு – எதிர்பார்ப்பும், சவால்களும்!

இந்தியாவில் இதுவரை நடைமுறையில் இருந்த 44 மத்திய தொழிலாளர் சட்டங்களை ஒன்றிணைத்து, மத்திய அரசு 4 புதிய தொழிலாளர் விதிகளை அறிமுகப்படுத்தியுள்ளது. இது சுதந்திர இந்தியாவின் தொழிலாளர் வரலாற்றில் மிகப்பெரிய சீர்திருத்தமாகக் கருதப்படுகிறது.
இந்த மாற்றத்தின் முக்கிய நோக்கம், நிறுவனங்களுக்கு விதிமுறை பின்பற்றலை எளிமைப்படுத்துவதும், business compliance burden-ஐ குறைப்பதுமாகும். இத்துடன், முன்பு முறையான (Formal) துறைக்கு மட்டும் பொருந்திய சட்டப் பாதுகாப்புகளை, முறைசாரா துறையில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கும் விரிவுபடுத்துவது இந்த சீர்திருத்தத்தின் மையக் குறிக்கோளாகும்.
அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு சமூக பாதுகாப்பு
இந்தியாவில் உள்ள சுமார் 47 கோடி தொழிலாளர்களில், 90 விழுக்காட்டுக்கும் அதிகமானோர் முறைசாரா துறையில் பணிபுரிகின்றனர். இவர்களுக்குத் இதுவரை ஓய்வூதியம், மருத்துவக் காப்பீடு போன்ற அடிப்படை சமூகப் பாதுகாப்பு கிடைக்காத நிலையில், புதிய தொழிலாளர் விதிகள் இந்நிலையை மாற்றும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.
விவசாயத் தொழிலாளர்கள், வீட்டு வேலை செய்யும் பெண்கள், புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், மற்றும் Swiggy, Zomato போன்ற தளங்களில் பணிபுரியும் கிக்/பிளாட்பார்ம் தொழிலாளர்களும் (Gig & Platform Workers) இப்போது சட்டரீதியான பாதுகாப்பின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளனர்.
நியமனக் கடிதம் முதல் குறைந்தபட்ச ஊதியம் வரை
புதிய விதிகளின்படி, அனைத்து தொழிலாளர்களுக்கும் நியமனக் கடிதம் வழங்குவது கட்டாயமாகிறது. குறைந்தபட்ச ஊதியம் உறுதி செய்யப்படுகிறது. நிரந்தர ஊழியர்களுக்கு வழங்கப்படும் பல சலுகைகள் ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளன.
ஒப்பந்த ஊழியர்களுக்கான Gratuity பெறும் தகுதி 5 ஆண்டுகளில் இருந்து 1 ஆண்டாகக் குறைக்கப்பட்டுள்ளது. இது தற்காலிக மற்றும் ஒப்பந்த ஊழியர்களுக்கு மிகப் பெரிய நிவாரணமாகக் கருதப்படுகிறது.
ஆதார் அடிப்படையிலான கட்டாய பதிவு
அனைத்துத் தொழிலாளர்களுக்கும் சமூக பாதுகாப்பு வழங்க, அரசு ஆதார் அடிப்படையிலான இணையதளப் பதிவை கட்டாயமாக்க திட்டமிட்டுள்ளது. அமைப்புசாரா தொழிலாளர்கள், சுயதொழில் செய்பவர்கள், தினக்கூலித் தொழிலாளர்கள், நடைபாதை வியாபாரிகள் முதல் வீட்டு வேலை செய்பவர்கள்வரை அனைத்துப் பிரிவினரும் இந்த தளத்தில் பதிவு செய்ய வேண்டும்.
பதிவு செய்யாதவர்களை வேலைக்கு அமர்த்தக்கூடாது என்ற விதி நடைமுறைக்கு வந்தால், குறிப்பாக சிறிய நிறுவனங்கள் மற்றும் வீட்டு வேலைகளில் இது பெரும் சவாலாக மாறும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.
கட்டாய நிதி பங்களிப்பு – கவலைகள் அதிகம்
புதிய தொழிலாளர் விதிகளின்படி, அமைப்புசார்ந்த மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்களுக்கும் EPFO மற்றும் ESI சலுகைகள் விரிவுபடுத்தப்படுகின்றன. ஆனால், இதற்காக தொழிலாளர்கள் தங்களின் ஊதியத்தில் இருந்து 12% வரை பங்களிப்பு செய்ய வேண்டிய கட்டாயம் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
முறைசாரா தொழிலாளர்களுக்கு 12.5% முதல் 30% வரை சமூகப் பாதுகாப்பு நிதிக்கு பங்களிப்பு கட்டாயமாக்கப்படுவது, குறைந்த வருமானம் பெறும் தொழிலாளர்களின் வாழ்க்கைச் செலவுகளை கடுமையாக பாதிக்கலாம் என்ற அச்சமும் உள்ளது.
அரசியல் எதிர்ப்புகள் மற்றும் தொழிற்சங்கக் கவலைகள்
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) மற்றும் பா.ம.க உள்ளிட்ட கட்சிகள், இந்த புதிய தொழிலாளர் சட்டங்கள் தொழிலாளர் விரோதமானவை என்றும், கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு சாதகமாக வடிவமைக்கப்பட்டுள்ளன என்றும் விமர்சித்துள்ளன.
100 ஊழியர்களிலிருந்து 300 ஊழியர்கள் வரை எண்ணிக்கை உயர்த்தி, நிறுவனங்களுக்கு ஆட்குறைப்பு செய்ய அரசின் முன் அனுமதி தேவையான வரம்பை உயர்த்தியிருப்பது, தொழிலாளர்களின் வேலைவாய்ப்பைப் பாதுகாப்பற்ற நிலையில் தள்ளும் என தொழிற்சங்கங்கள் எச்சரிக்கின்றன.
வெற்றிக்கு தேவையான சமநிலை
அனைத்துத் தொழிலாளர்களுக்கும் உலகளாவிய சமூகப் பாதுகாப்பு வழங்குவது ஒரு பாராட்டத்தக்க நோக்கமாக இருந்தாலும், நடைமுறைச் சிக்கல்கள், அதிக நிதி பங்களிப்பு சுமை மற்றும் கட்டாய பதிவுச் செயல்முறைகள் சரியாக சமநிலைப்படுத்தப்படாவிட்டால், இந்த சீர்திருத்தங்கள் எதிர்பார்த்த பலனை அளிக்காமல் போகும் அபாயம் உள்ளது என்றும் சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.













