தமிழ்நாடு
கட்டுக்கடங்காமல் பரவிய தொற்று… ஐஐடி மெட்ராஸில் இவ்ளோ பேருக்கு கொரோனாவா?
சென்னை, கிண்டியில் இருக்கும் ஐஐடி மெட்ராஸ் கல்வி நிறுவனத்தில் பலருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. நேற்று ஐஐடி மெட்ராஸில், 141 பேருக்கு கொரோனா தொற்று இருந்தது உறுதி செய்யப்பட்டது. இன்று காலை வரை கூடுதலாக 8 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியானது. தற்போது வரை ஐஐடி மெட்ராஸில் 191 பேருக்கு கோவிட்-19 தொற்று ஏற்பட்டுள்ளது. சில நாட்களுக்கு முன்னர்தான் தமிழகத்தில் உள்ள கல்லூரிகளில் இறுதியாண்டு வகுப்புகள் மட்டும் கட்டுப்பாடுகளுடன் நடத்திக் கொள்ளலாம் என்று மாநில அரசு அனுமதி அளித்தது. அப்படி அனுமதி கொடுத்த ஒரு சில நாட்களில் சென்னையில் இருக்கும் முக்கிய கல்வி நிறுவனத்தில் கொரோனா தொற்று பாதிப்பு அதிகமாகி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த காரணத்தினால் மாநிலத்தில் இருக்கும் அனைத்து கல்லூரிகளிலும் மாணவர்களுக்கு கொரோனா தொற்று இருக்கிறதா என்று சோதனை செய்ய வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
தற்போது ஐஐடி மெட்ராஸில் தற்காலிகமாக தனது துறைகள், பரிசோதனைக் கூடங்கள், நூலகங்களை ஐஐடி மெட்ராஸ் நிர்வாகம் மூடியுள்ளார்கள். இது குறித்து ஐஐடி மெட்ராஸில் பயின்று வரும் மாணவர்களுக்கு மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது.
ஐஐடி மெட்ராஸில் ஏற்பட்ட இந்த பாதிப்புக்குக் காரணம், வளாகத்தில் உள்ள விடுதி கேன்டீன்தான் என்று குற்றம் சாட்டப்படுகிறது. அங்கு மாணவர்கள் போதிய முன்னெச்சரிக்கைகளை கடைபிடிக்காமல் மிகவும் நெருக்கமாக புழங்கியுள்ளனர் என்று கூறப்படுகிறது. அதே நேரத்தில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் எல்லோரும் நல்ல உடல்நலத்தோடு இருக்கிறார்கள் என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது வளாகத்தின் விடுதிகளில் தங்கியுள்ள குறைந்த விகிதத்திலான மாணவர்களுக்கு பேக் செய்யப்பட்ட உணவுகள் வழங்கப்பட்டு வருகிறது. இதுவரை ஐஐடி மெட்ராஸில் சுமார் 1,000 பேருக்கு கொரோனா தொற்று சோதனை எடுக்கப்பட்டுள்ளது.