செய்திகள்
சென்னையில் ஃபார்முலா 4 கார் பந்தயத்தில் நாய் குறுக்கே வந்ததால் ரேஸ் நிறுத்தப்பட்டது!

சென்னை: ஃபார்முலா 4 கார் பந்தயம் கடந்த சனிக்கிழமை இரவு சென்னையில் தொடங்கியது. மதியம் 2 மணிக்கு தொடங்கும் என அறிவிக்கப்பட்டிருந்தாலும், பந்தய களம் சில குறைகள் காரணமாக சர்வதேச வாரியத்தின் அறிவுறுத்தலின்படி மாற்றங்கள் செய்யப்பட்டன. இதனால் பந்தயம் இரவு 9 மணிக்குத்தான் தொடங்கியது.
இந்த தாமதம் ரசிகர்களை அதிருப்தியடையச் செய்தாலும், மின்சார வேகத்தில் கார்களின் பயிற்சி சுற்றுகள் அவர்களுக்கு விருந்தாக அமைந்தன. மாயி படத்தில் வடிவேலுவின் “வாம்மா மின்னல்” காமெடியைப் போல, கார்கள் ரசிகர்கள் கண்முன்னே சீறி பாய்ந்தன.
இந்நிலையில், பயிற்சிப் பந்தயம் நடந்து கொண்டிருந்தபோது, திடீரென ஒரு தெரு நாய் பந்தய சாலைக்குள் குறுக்கே வந்தது. பந்தய கார்கள் சென்று கொண்டிருக்கும் போது, முன்னணியில் சென்ற வழிகாட்டி கார் அந்த நாயைக் கண்டு, மற்ற பந்தய கார்களை உடனடியாக நிறுத்தியது. இதனால் பயிற்சி பந்தயம் சிறிது நேரம் நிறுத்தப்பட்டது.
நாய்கள் சென்னையில் பொதுவாகவே ஒரு பிரச்சனையாக இருந்து வருகின்றன, இதனை மக்கள் பலரும் முன்னதாகவே கூறியிருந்தனர். உலகமெல்லாம் கண்டு களிக்கும் பந்தயத்தில் இவ்வாறு ஒரு நாய் குறுக்கே வந்து, சர்வதேச போட்டியை நிறுத்தியதற்காக சென்னையின் பாதுகாப்பு நடவடிக்கைகள் மீண்டும் கேள்விக்குறியாகியுள்ளது.
இந்த சம்பவம் பந்தயத்தில் மட்டுமல்ல, சென்னையில் நடைபெறும் பிற போட்டிகளிலும் இடம்பெற்றுள்ளது. 2011ஆம் ஆண்டு உத்தரப்பிரதேசத்தில் நடந்த கிராண்ட் பிரீ பந்தயத்திலும் இதுபோன்றதொரு சம்பவம் நிகழ்ந்தது. அண்மையில் சென்னையில் நடந்த ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் மற்றும் ஐபிஎல் போட்டிகளிலும் நாய் குறுக்கே வந்து போட்டியை தாமதப்படுத்திய சம்பவங்கள் இடம்பெற்றன.
இந்நிலையில், ரசிகர்கள் இப்போதும் “கார் பந்தயத்தில் கூட நாய் என்ட்ரி கொடுத்துவிட்டது, சென்னையில் வாகனத்தை இயக்குவது நாங்கள்தான் உண்மையான வீரர்கள்” என்று கலாய்த்து வருகின்றனர்.


















