வணிகம்
EPS-95 ஓய்வூதிய உயர்வு – இபிஎஃப் உறுப்பினர்களுக்கு தீபாவளி பரிசா?

இபிஎஃப் (EPF) உறுப்பினர்களுக்கு பெரும் மகிழ்ச்சி தரக்கூடிய செய்தி வெளியாகியுள்ளது. EPS-1995 திட்டத்தின் கீழ் வழங்கப்படும் குறைந்தபட்ச மாத ஓய்வூதியம் விரைவில் உயர்த்தப்படலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
அக்டோபர் 10 மற்றும் 11, 2025 ஆகிய தேதிகளில் பெங்களூருவில் மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சர் மன்சுக் மண்டவியா தலைமையில் மத்திய அறங்காவலர் குழு (CBT) கூட்டம் நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தில் ஓய்வூதிய உயர்வு தொடர்பான முடிவுகள் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது EPS கீழ் ஓய்வூதியதாரர்கள் பெறும் குறைந்தபட்ச மாத ஓய்வூதியம் ரூ.1,000 – ரூ.1,500 ஆக உள்ளது. இதை ரூ.2,000 – ரூ.2,500 அல்லது அதிகபட்சம் ரூ.3,000 வரை உயர்த்தும் வாய்ப்பு உள்ளது என்று வட்டாரங்கள் கூறுகின்றன. இது தீபாவளிக்கு முன் அறிவிக்கப்படுவதால், ஓய்வூதியதாரர்களுக்கு ஒரு “பண்டிகை பரிசு” ஆக அமையக்கூடும்.
இதேவேளை, ஓய்வூதிய அமைப்புகள் குறைந்தபட்ச ஓய்வூதியத்தை ரூ.7,500 வரை உயர்த்த கோரிக்கை விடுத்துள்ளன. ஆனால் நிபுணர்களின் கருத்துப்படி, அதிகபட்ச ஓய்வூதிய வரம்பு திருத்தப்படாமல் உடனடியாக அந்த அளவு உயர்வு சாத்தியம் இல்லை. தற்போது EPS மூலம் வழங்கப்படும் அதிகபட்ச ஓய்வூதியம் ரூ.7,500 ஆகும்.
வாழ்க்கைச் செலவுகள் அதிகரித்து வரும் சூழலில், தொழிற்சங்கங்களின் நீண்ட நாள் கோரிக்கையை கருத்தில் கொண்டு இந்த உயர்வு நடைமுறைக்கு வந்தால், லட்சக்கணக்கான ஓய்வூதியதாரர்களுக்கு பெரும் நிம்மதியை அளிக்கும்.















