கிரிக்கெட்
‘இந்த பொழப்புக்கு…’- 3வது டெஸ்டின் போது Pitch-ஐ சேதப்படுத்தினார் ஸ்மித்; வெடிக்கும் சர்ச்சை! #INDvAUS
இந்தியா – ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிகளுக்கு இடையேயான 3வது டெஸ்ட் நேற்று முடிந்தது. இந்தப் போட்டியில் தன் நிதானமான ஆட்டம் மூலம் தோல்வியைத் தவிர்த்தது இந்திய அணி. ஆனால் ஒரு கட்டத்தில் அதிரடியாக விளையாடிய ரிஷப் பன்ட், எப்படியும் அணியை வெற்றிக்கு இட்டுச் செல்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது. குறிப்பாக அவர் 117 பந்துகளில் 97 ரன்கள் விளாசி, ஆஸ்திரேலியர்களுக்கு அச்சுறுத்தலாக விளங்கினார்.
ஆனால், நேற்று தேனீர் இடைவெளியை அடுத்து மீண்டும் விளையாடத் தொடங்கிய பன்ட், தனது விக்கெட்டை பறிகொடுத்து வெளியேறினார். இதன் பின்னர் இந்தியாவின் வெற்றிக் கனவு தகர்க்கப்பட்டது. ஆனால், சாமர்த்தியமாக விளையாடி ஆஸ்திரேலியாவின் வெற்றிக் கனவையும் தகர்த்தது இந்தியா.
இந்நிலையில் பன்ட், அவுட்டாகும் முன்னர், ஆஸ்திரேலிய அதிரடி பேட்ஸ்மேன் ஸ்டீவ் ஸ்மித், அவர் நின்றிருந்த இடத்திற்கு வந்து பிட்ச்சை சேதப்படுத்தினார் என்ற பரபரப்பு குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அது குறித்தான வீடியோவும் வெளியாகி மேலும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
ஒரு வேளை ஸ்மித் செய்த காரியத்தினால்தான் பன்ட், தனது விக்கெட்டை பறிகொடுக்க நேர்ந்ததோ என்றெல்லாம் தற்போது விவாதம் கிளப்பப்பட்டு வருகிறது.
After drinks break Aussie comes to shadow bat and scuffs out the batsmen’s guard marks.
Rishabh Pant then returns and has to take guard again.#AUSvIND #AUSvsIND #AUSvINDtest pic.twitter.com/aDkcGKgUJC
— Cricket Badger (@cricket_badger) January 11, 2021
இந்நிலையில் இந்த சர்ச்சை குறித்து ஆஸ்திரேலிய கிரிக்கெட் கேப்டன் டிம் பெயின், ‘இது குறித்து நான் ஸ்மித்திடம் பேசினேன். அவர் அங்கு செய்தது பிட்ச்சை சேதப்படுத்திய காரியம் அல்ல. இது தவறாக புரிந்து கொள்ளப்பட்டது. நீங்கள் ஸ்டீவ் ஸ்மித், டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடுவதை பார்த்தீர்கள் என்றால், இதைப் போன்ற நிறைய விஷயங்களை அவர் செய்வதை உங்களால் கவனிக்க முடியும்.
டெஸ்ட் போட்டிகளில் ஸ்மித் விளையாடும் போது, ஃபீல்டிங் செய்தாலும் தானே சென்று விளையாடுவது போல அடிக்கடி நினைத்துக் கொள்வார். தான் விளையாடினால் எப்படி நிற்பேன். என்ன செய்வேன் என்பதையெல்லாம் அவர் செய்து பார்த்துக் கொள்வார். உண்மை இப்படி இருக்கும் நிலையில், அவர் தவறாக புரிந்து கொள்ளப்பட்டது துரதிர்ஷ்ட வசமானது. அவரும் இதனால் மனமுடைந்து உள்ளார்.
ஸ்மித், பிட்ச்சை சேதப்படுத்தி இருந்தால், இந்திய வீரர்கள் கண்டிப்பாக இது குறித்து முறையிட்டு இருப்பார்கள். ஸ்மித்தின் இந்த எதேச்சையான செயல் தவறாக புரிந்து கொள்ளப்பட்டு உள்ளதால், இனி அவர் அதைப் போன்ற செயலில் ஈடுபடுவது குறித்து சிந்திக்க வேண்டும்’ என்று விளக்கியுள்ளார்.
ஏற்கெனவே கிரிக்கெட் பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் சிக்கியவர் ஸ்மித். அதனால் ஓராண்டு காலம் கிரிக்கெட் விளையாட முடியாமல் தடை செய்யப்பட்டவர் ஸ்மித். இந்நிலையில், அவர் மீண்டும் இதைப் போன்ற சர்ச்சையில் சிக்கியிருப்பது குறிப்பிடத்தக்கது. ஆஸ்திரேலிய கிரிக்கெட் நிர்வாகமும், அந்நாட்டு முன்னாள் மற்றும் மூத்த வீரர்களும் ஸ்மித், இதைப் போன்ற சர்ச்சையில் சிக்கியுள்ளதால் மிகவும் கோபத்தில் இருப்பதாகவும் தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன.