செய்திகள்
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை: புதிய விண்ணப்பங்கள் ரேஷன் கார்டை அடிப்படையாக வைத்து நிராகரிக்கப்படுமா?

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை (Kalaignar Magalir Urimai Thogai) திட்டத்துக்கு இதுவரை 15 லட்சத்துக்கும் மேற்பட்ட பெண்கள் ஸ்டாலின் முகாம்களில் நேரடியாகவும், ஆன்லைன் மூலமாகவும் விண்ணப்பித்துள்ளனர். மேலும் பலரும் இன்னும் விண்ணப்பித்து வருகின்றனர்.
திட்டத்துக்கு விண்ணப்பிக்கும் புதியவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து கொண்டே வருகிறது. குறிப்பாக, சமீபத்தில் ரேஷன் கார்டு பெற்றவர்கள் முதலில் செய்வது இந்தத் திட்டத்துக்கான விண்ணப்பமே. ஏனெனில், மகளிர் உரிமைத் தொகை பெற குடும்ப அட்டை (ரேஷன் கார்டு) கட்டாயமாகும்.
இதனால், இதுவரை ரேஷன் கார்டு எடுக்காத பலரும், அவசரமாக புதிய ரேஷன் கார்டு பெற்றுக் கொண்டு விண்ணப்பித்து வருகின்றனர். ஆனால், இங்குதான் முக்கிய பிரச்சனை எழுந்திருக்கிறது.
அரசு அதிகாரிகள் தெரிவித்ததாவது:
வாடகை ஒப்பந்தத்தின் அடிப்படையில் ரேஷன் கார்டு எடுத்திருந்தாலும், தற்போது வேறு ஊரில் குடியிருந்தால், அந்த விண்ணப்பங்கள் கள ஆய்வில் நிராகரிக்கப்படலாம்.
ஒரே ரேஷன் கார்டை வைத்து மீண்டும் மீண்டும் விண்ணப்பித்தால் அவையும் செல்லாது.
பொருளில்லாத (No Commodity) ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களின் விண்ணப்பங்களும் நிராகரிக்கப்படும்.
எனவே, விண்ணப்பிக்கும் போது ரேஷன் கார்டில் உள்ள முகவரியும், தற்போதைய வசிப்பிட முகவரியும் பொருந்துகிறதா என்பதைக் கவனிக்க வேண்டும். இல்லையெனில், விண்ணப்பம் நிராகரிக்கப்பட வாய்ப்பு அதிகம்.

















