சினிமா செய்திகள்
பாலா படத்தில் சூர்யாவுக்கு இரட்டை வேடம், நாயகி இவர்தான்!

இயக்குனர் பாலா இயக்கும் அடுத்த படத்தில் சூர்யாவுக்கு இரட்டை வேடம் என்றும் இந்த படத்தின் நாயகி முன்னணி நடிகை என்றும் தகவல்கள் வெளிவந்துள்ளன.
சூர்யா நடித்த ’ஜெய்பீம்’ திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்ற நிலையில் அவருடைய ’எதற்கும் துணிந்தவன்’ திரைப்படம் அடுத்த ஆண்டு பிப்ரவரி 4ஆம் தேதி வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் சூர்யாவின் அடுத்த படத்தை இயக்குபவர் இயக்குனர் பாலா என்பது குறித்த செய்தியை ஏற்கனவே பார்த்தோம். இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் டிசம்பர் மாதம் தொடங்க உள்ளது.
இந்த நிலையில் இந்த படத்தில் சூர்யா இரண்டு வேடங்களில் நடிக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. முதலில் ஒரு வேடத்தில் முன்னணி நடிகர் ஒருவரிடம் நடிக்க பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாகவும், ஆனால் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் சூர்யாவே இரண்டு வேடங்களில் நடிக்க இருப்பதாகவும் தெரிகிறது.
அதேபோல் இந்த படத்தின் நாயகியாக கீர்த்தி சுரேஷ் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஏற்கனவே சூர்யாவுடன் ’தானா சேர்ந்த கூட்டம்’ என்ற திரைப்படத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள நிலையில் தற்போது இரண்டாவது முறையாக சூர்யாவுடன் இணைகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் இந்த படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைக்க அதிக வாய்ப்பு இருப்பதாகவும் இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்றும் கூறப்படுகிறது. நீண்ட இடைவெளிக்குப் பின் சூர்யா மற்றும் பாலா இணையும் இந்த திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.



















