தமிழ்நாடு
“மிஸ்டர் பழனிசாமி… சசிகலா காலருகே ஊர்ந்து சென்று முதலமைச்சரானது உண்மையா – இல்லையா..?”- வம்பிழுக்கும் ஸ்டாலின்

தமிழக முதல்வராக இருக்கும் எடப்பாடி பழனிசாமி, சசிகலாவின் காலருகே ஊர்ந்து சென்று தான் அந்தப் பதவியைப் பெற்றார் என்றும், இதை அவரால் மறுக்க முடியுமா என்றும் கேள்வி எழுப்பியுள்ளார் மு.க.ஸ்டாலின்.
திமுக பொதுக் கூட்டத்தில் இது குறித்துப் பேசிய ஸ்டாலின்,
அம்மையார் ஜெயலலிதா அவர்கள் மறைந்துவிட்டார். அதனால் அவர் தண்டனை அனுபவிக்க வேண்டிய அவசியமில்லை. ஆனால் குற்றம் குற்றம் தான். அவர் உயிரோடு இருந்திருந்தால் நிச்சயம் சசிகலாவுடன் தண்டனை பெற்று 27ஆம் தேதி தான் விடுதலையாகி வெளியே வந்திருப்பார்.

அவ்வாறு தீர்ப்பு வந்தவுடன், முதலமைச்சராக பதவியேற்க இருந்த சசிகலா அவர்கள் அடுத்து யாரை முதலமைச்சராக உட்கார வைக்கலாம் என்று கூவத்தூரில் யோசித்துக் கொண்டிருந்தபோது, திடீரென்று அவர் காலில் ஏதோ ஊர்ந்து வந்தது.
அதற்கு மேல் நான் சொல்ல விரும்பவில்லை. அவ்வாறு சொன்னால் அவருக்கு கோபம் வந்துவிடும். அவர், தான் யாருடைய தயவிலும் முதலமைச்சர் ஆகவில்லை என்று சொல்லுவார்.
கலைஞர் முதலமைச்சரானபோது எம்.ஜி.ஆர். உள்ளிட்ட திராவிட முன்னேற்றக் கழகத்தின் சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் சேர்ந்து தேர்ந்தெடுத்து கலைஞரை முதலமைச்சராக உட்கார வைத்தார்கள்.

ஆனால் பழனிசாமி முதலமைச்சர் ஆனது எப்படி என்பது நாட்டுக்கே தெரியும். இப்பொழுது கேட்கிறேன் பழனிசாமியைப் பார்த்து, “ஊர்ந்து வந்தது உண்டா? இல்லையா?” இதற்கு நீங்கள் பதில் சொல்லுங்கள்’ என்று கேள்வி எழுப்பியுள்ளார்.


















