செய்திகள்
ஆட்சியை பிடிக்க வேல் பிடித்து ஆடுகிறார் ஸ்டாலின்… ஓபிஎஸ் விலாசல்…
மதுரையில் நடந்த எம்ஜிஆர் ஜெயலலிதா கோயில் திறப்பு விழாவில் திமுக தலைவர் ஸ்டாலின் ஆட்சியை பிடிக்க வேல் பிடித்து ஆடுகிறார் என ஓ.பன்னீர்செல்வம் பேசியுள்ளார்.
எம் ஜி ஆரும், ஜெயலலிதாவும் தமிழக மக்களுக்கு ஆற்றிய நன்மைகள் எண்ணிலடங்காதவை. தீய சக்திகளால் உருவாக்கப்பட்ட அனைத்து சதிகளையும் முறியடித்து ஜெயலலிதா நினைவிடம் திறக்கப்பட்டுள்ளது.
எம்ஜிஆர் கொடுத்த நல்வழியை தொடர கற்றுக் கொடுத்தவர் ஜெயலலிதா. அதிமுக மக்கள் சக்தி, தெய்வ சக்தியை நம்பி இயங்குகிறது. இங்கு மக்கள் சக்தியும், தெய்வ சக்தியும் சேர்ந்து உள்ளன.
சிலர் தெய்வங்களை குறை சொல்லி வருகிறார்கள். தமிழகத்தில் வெற்றி பெற வடக்கிலிருந்து ஆள் பிடித்தும், தமிழகத்தில் வேல் பிடித்தும் வருகிறார்கள். அவர்கள் ஆள் பிடித்தாலும் சரி வேல் பிடித்தாலும் சரி தமிழகத்தில் ஆட்சியை பிடிக்க முடியாது என திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை விமர்சனம் செய்தார் ஓ.பன்னீர்செல்வம்.
10 ஆண்டு ஆட்சியில் இல்லாத ஸ்டாலின் பல நாடகங்களை அரங்கேற்றி வருகிறார்.தமிழகத்தில் மீண்டும் திமுக ஆட்சிக்கு வந்தால் காய்ந்த மாடு கம்பு தோட்டத்தில் புகுந்தது போல் ஆகிவிடும் என்பதில் மக்கள் தெளிவாக உள்ளார்கள் எனவும் ஓ.பன்னீர்செல்வம் விமர்சித்தார்.