கிரிக்கெட்
இந்தியாவிடம் மண்ணைக் கவ்விய ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி… வெளுத்து வாங்கிய முன்னாள் கேப்டன்!

ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி, அடுத்ததாக டெஸ்ட் தொடரில் விளையாட இருக்கிறது. 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் வரும் 17 ஆம் தேதி ஆரம்பிக்கிறது. இந்நிலையில் இந்தியாவுக்கும் ஆஸ்திரேலியா ஏ அணிக்கும் இடையில் பயிற்சிப் போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியில் இந்திய அணி, கெத்தாக விளையாட, ஆஸ்திரேலிய அந்தளவுக்கு சோபிக்கவில்லை. இதனால் கடுப்பான முன்னாள் ஆஸ்திரேலிய கேப்டன் ஆலன் பார்டர், தங்கள் நாட்டு அணியைக் கடுமையாக சாடியுள்ளார்.
இந்தப் பயிற்சிப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, 194 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. பின்னர் களமிறங்கிய அலெக்ஸ் கேரி தலைமையிலான ஆஸ்திரேலிய ஏ அணி, 108 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகி அதிர்ச்சிக் கொடுத்தது. தொடர்ந்து இந்திய அணி, இரண்டாவது இன்னிங்ஸில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 386 ரன்கள் எடுத்தது. இந்தியா சார்பில் அனுமன் விகாரி மற்றும் ரிஷப் பன்ட் ஆகியோர் சதம் விளாசினார்கள். பின்னர் களமிறங்கிய ஆஸ்திரேலியா, 307 ரன்கள் மட்டுமே எடுத்தது.
இது குறித்து பார்டர், ‘இந்த மொத்தப் போட்டியில் ஆஸ்திரேலியா சோம்பேறித் தனமாக விளையாடியது. ஆஸ்திரேலிய அணி, பல நேரங்களில் மோசமாக விளையாடியுள்ளது. ஆனால், முழு முயற்சியைக் கொடுக்காமல் இருந்தது கிடையாது. ஆனால், இந்த ஆட்டம் அப்படி இல்லை. அதுதான் எனது கோபத்துக்குக் காரணம். எல்லோரையும் நான் சொல்ல மாட்டேன். ஆனால் ஒரு அணியாக அவர்களின் ஆட்டம் சரியில்லை. அலெக்ஸ் கேரி, அடுத்த ஆஸ்திரேலிய கேப்டனாக வேண்டும் என்று விருப்பப்பட்டால் அவர் நிறைய நிரூபிக்க வேண்டியுள்ளது’ என்று அடுக்கடுக்கான விமர்சனங்களை வைத்தார்.





















