கிரிக்கெட்
தி வெயிட் இஸ் ஓவர்… சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சர்வதேச கிரிக்கெட் போட்டி – பிசிசிஐ அறிவிப்பு!

கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்ததைத் தொடர்ந்து கடந்த மார்ச் மாதம் இந்தியாவில் லாக்டவுன் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. பின்னர் தொற்று பாதிப்பு குறைவடைந்ததை அடுத்து, பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டன. இன்னுமும் கூட நாடு தழுவிய அளவில் சில கட்டுப்பாடுகள் உள்ளன.
மார்ச் மாதம் முதல் இப்போது வரை நாட்டில் சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் நடத்த அனுமதி அளிக்கப்படவில்லை. இந்த காரணத்தினால்தான், ஐபிஎல் தொடர் கூட இந்தியாவில் நடத்தப்படாமல், ஐக்கிய அரபு அமீகரத்தில் நடத்தி முடிக்கப்பட்டது. இப்படியான சூழலில் இந்தியாவில் விளையாடப் போகும் முதல் சர்வதேச தொடர் குறித்தான அறிவிப்பு வெளியாகியுள்ளது. குறிப்பாக சென்னையில் உள்ள சேப்பாக்கத்தில் சர்வதேச கிரிக்கெட் போட்டிகள், கம்-பேக் கொடுக்க உள்ளன.

இந்த ஆண்டு இறுதியில் இங்கிலாந்து கிரிக்கெட் அணி, இந்தியாவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டு டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளை விளையாட இருந்தது. ஆனால், கொரோனா தொற்று காரணமாக அந்த தொடர் தற்போது அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதத்துக்கு மாற்றப்பட்டுள்ளது.
அதன்படி 4 டெஸ்ட் போட்டிகள், 5 டி20 போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் நடைபெற உள்ளன. பிப்ரவரி 5 ஆம் தேதி, சென்னையில் முதல் டெஸ்ட் போட்டி ஆரம்பமாகிறது. இரண்டாவது டெஸ்ட் மீண்டும் சென்னையிலேயே பிப்ரவரி 13 ஆம் தேதி ஆரம்பமாகிறது. சென்னையைத் தவிர்த்து அகமதாபாத் மற்றும் புனே நகரங்களில் மற்ற போட்டிகள் நடத்தப்படுகின்றன. கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பின்பற்றப்பட்டு இந்தப் போட்டிகள் நடக்கவிருக்கின்றன என்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ தெரிவித்துள்ளது.





















