வணிகம்
மத்திய அரசு ஊழியர்களுக்கு தீபாவளி சலுகை – ஜூலை 2025 முதல் அகவிலைப்படி 58% ஆக உயர்வு, மூன்று மாத பாக்கியும் சேர்த்து வழங்கப்படும்!

மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு நல்ல செய்தி வெளியாகியுள்ளது. ஜூலை 2025 முதல் அகவிலைப்படி (DA/DR) 3% உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தற்போது வழங்கப்பட்டு வரும் 55% DA, 58% ஆக அதிகரிக்கிறது.
இந்த உயர்வின் மூன்று மாத பாக்கியும் வரும் அக்டோபர் மாத சம்பளத்திலும் ஓய்வூதியத்திலும் சேர்த்து வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் சுமார் 1.2 கோடி மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் நேரடி பலன் பெறவுள்ளனர்.
தீபாவளிக்கு முன் கூடுதல் வருமானம்
அரசு வழக்கம்போல் ஜனவரி–ஜூன் காலத்திற்கு ஹோலிக்கு முன்பும், ஜூலை–டிசம்பர் காலத்திற்கு தீபாவளிக்கு முன்பும் DA உயர்வை அறிவித்து வருகிறது. இந்த ஆண்டு தீபாவளி அக்டோபர் 20, 21-ந்தேதிகளில் வருவதால், ஊழியர்களுக்கும் ஓய்வூதியதாரர்களுக்கும் அக்டோபரில் சம்பளத்துடன் கூடுதல் வருமானம் கிடைக்க உள்ளது.
ஊழியர் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு கிடைக்கும் பலன்
அடிப்படை ஊதியம் ரூ.18,000 பெறும் ஊழியர், இதுவரை ரூ.9,900 (55%) பெற்றார். இப்போது 58% உயர்வால் ரூ.10,440 கிடைக்கும். அதாவது மாதந்தோறும் ரூ.540 அதிகம்.
ரூ.20,000 ஓய்வூதியம் பெறும் ஒருவர் இதுவரை ரூ.11,000 பெற்றிருந்தால், இப்போது ரூ.11,600 கிடைக்கும். அதாவது மாதந்தோறும் ரூ.600 கூடுதல் வருமானம்.
7வது கமிஷனின் கடைசி உயர்வு
இந்த உயர்வு 7வது ஊதியக் கமிஷனின் கடைசி அகவிலைப்படி உயர்வாகும். ஏனெனில், 7வது கமிஷன் காலம் 2025 டிசம்பர் 31-ஆம் தேதியுடன் முடிவடைகிறது.
8வது ஊதியக் கமிஷன் எப்போது?
அரசு ஜனவரி 2025-ல் 8வது ஊதியக் கமிஷனை அறிவித்திருந்தாலும், தலைவர் மற்றும் உறுப்பினர்கள் இன்னும் நியமிக்கப்படவில்லை. குறிப்பு விதிமுறைகளும் (ToR) தயாராகவில்லை. பரிந்துரைகள் நடைமுறைக்கு வர 18–24 மாதங்கள் ஆகும் என்பதால், புதிய ஊதிய அமைப்பு 2027 இறுதி அல்லது 2028 தொடக்கத்தில் அமலுக்கு வரும் வாய்ப்பு உள்ளது. நிபுணர்களின் கணிப்புப்படி, 8வது கமிஷனில் 30% முதல் 34% வரை சம்பள உயர்வு இருக்கலாம்.


















