இந்தியா
தங்க பத்திரம் திட்டத்தில் ஏன் முதலீடு செய்யலாம்.. இதோ சில முக்கிய காரணங்கள்..!

தங்கப் பத்திரத் திட்டம் நேற்று தொடங்கப்பட்ட நிலையில் இதில் முதலீடு செய்வதற்கு முன் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய சில முக்கிய விஷயங்கள் குறித்து தற்போது பார்ப்போம்.
இந்த நிதியாண்டின் 2022-23 தங்கப் பத்திரத் திட்டத்தின் கடைசித் தவணை நேற்று முதல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ. 5,611 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு டிசம்பரில் ஒரு கிராமுக்கு ரூ. 5,409 என விற்பனையான நிலையில் அதனுடன் ஒப்பிடும்போது ஒரு கிராமுக்கு ரூ. 202 அதிகமாகும். மார்ச் 10 வரை தங்க பத்திரங்களை வாங்கி கொள்ளலாம்.
* தங்கப் பத்திரங்கள் இந்திய அரசின் சார்பாக இந்திய ரிசர்வ் வங்கியால் (RBI) வழங்கப்படும் தங்கத்தின் பத்திரங்களாகும்.
* மற்ற டிஜிட்டல் சொத்துக்களில் இருந்து தங்க பத்திரங்கள் வேறுபடுகிறது. ஏனெனில் இது ஆண்டுக்கு 2.50 சதவீத வட்டி விகிதத்தையும் வழங்குகிறது. முதிர்வு நேரத்தில், தற்போதைய சந்தை விலையில் உள்ள தங்கத்தின் மதிப்பு வட்டி வருமானத்துடன் திருப்பித் தரப்படும்.
* தங்கத்தை வாங்குவதற்கான மலிவான வழிகளில் இதுவும் ஒன்றாகும், ஏனெனில் ஜிஎஸ்டி மற்றும் பிற கட்டணங்கள் வெளியீட்டு விலையில் சேர்க்கப்படாது.
* தங்க பத்திரங்களை ஆன்லைனில் வாங்கினால், டிஜிட்டல் முறையில் பணம் செலுத்துபவர்களுக்கு விலை கிராமுக்கு ரூ.50 சலுகை விலை உண்டு.
* இந்தப் பத்திரங்களில் ஒருவர் ஆண்டுக்கு அதிகபட்சம் 4 கிலோ வரை முதலீடு செய்யலாம். குறைந்தபட்ச வரம்பு 1 கிராம் தங்கம் கூட வாங்கி கொள்ளலாம்.
* தங்க பத்திரங்கள் 8 வருட கால அவகாசத்துடன் கிடைக்கும். இருப்பினும், வட்டி செலுத்தும் தேதியில் 5, 6 மற்றும் 7வது ஆண்டுகளில் வெளியேறலாம். முன்கூட்டியே திரும்பப் பெறுவதற்கு, குறைந்தபட்சம் ஒரு நாள் முன்னதாக சம்பந்தப்பட்ட வங்கி அல்லது அஞ்சல் அலுவலகத்தை அணுக வேண்டும்.
* நீங்கள் தங்க பத்திரத்தில் முதலீடு செய்யும் போது, ஒரு ஹோல்டிங் சான்றிதழ் வழங்கப்படும்.
* முதிர்வு காலம் முடிந்த பிறகு தங்க பத்திரங்கள் மூலம் கிடைக்கும் தொகைக்க்கு வரி விதிக்கப்படாது. ஆனால் வாங்கிய தங்க பத்திரங்களை 36 மாதங்களுக்கு முன்பு விற்றால் வரி விதிக்கப்படும்.