தமிழ்நாடு
தமிழக கோவில்களில் இராஜகோபுரம் மற்றும் புதிய தேர் ஏற்பாடு: அமைச்சர் சேகர்பாபு அறிவிப்பு!

தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலைத் துறையின் கீழ் இருக்கும் 15 கோவில்களுக்கு இராஜகோபுரம் மற்றும் 18 கோவில்களுக்கு புதிய தேர் விரைவில் அமைக்கப்படும் என அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு அறிவித்துள்ளார்.
கோவில் இராஜகோபுரம்
அமைச்சரின் அறிவிப்பு படி, திருச்சி மண்ணச்சநல்லூர் ஸ்ரீலிவனேஸ்வரர் கோவிலில் ரூ.7 கோடி செலவில் 5 நிலைகளை கொண்ட இராஜகோபுரமும், ஈரோடு வேலாயுதசாமி கோவில், நாமக்கல் தோளூர் நாச்சியார் கோவில், கும்பகோணம் கீழப்பழையாறை சோமநாத சுவாமி கோவில், விழுப்புரம் முன்னூர் ஆடவல்லீஸ்வரர் கோவில், வள்ளிபுரம் நல்லாயி அம்மன் கோவில் உள்ளிட்ட 15 கோவில்களில் ரூ.26 கோடி செலவில் இராஜகோபுரமும், திருவாருர் பூவலூர் சதுரங்க வல்லப நாதசாமி கோவில், திருச்செங்கோடு அர்த்த நாரீஸ்வரர் கோவில் மற்றும் ஸ்ரீவைகுண்டம் வல்லநாடு திருமூலநாத சுவாமி கோவில் உள்ளிட்ட 18 கோவில்களுக்கு புதிய மரத்தேர் செய்ய ரூ.9.20 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
ஆன்மீக பயணம்
சிறுவாபுரி பாலசுப்பிரமணிய சுவாமி கோவில், மருதமலை கோவில் மற்றும் மேல்மலையனூர் அங்காளம்மன் கோவில் உள்ளிட்ட 5 கோவில்களில் அடிப்படை வசதிகள் செய்யப்படும் எனவும், அதற்காக ரூ.200 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் 108 ஆன்மீக நூல்கள் வெளியிடப்படும் எனவும், இலவச ஆன்மீக பயணத்திற்கு 2023 ஆம் ஆண்டில் சுமார் 300 பேர் அழைத்து செல்லப்படுவார்கள் எனவும், கட்டணமில்லா இலவச திருமண உதவி ரூ.20,000 இல் இருந்து ரூ.50,000 ஆக உயர்த்தப்பட்டு உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.