தமிழ்நாடு
அனைத்து நூலகங்களிலும் விரைவில் வைஃபை வசதி: அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவிப்பு!

தமிழ்நாட்டில் அரசு வேலைக்காக போட்டித் தேர்வு எழுதும் மாணவர்களின் நலனுக்காக, கடந்த ஜனவரி மாதம் 500 அரசு நூலகங்களில் வைஃபை (Wi-Fi) சேவை அமைக்கப்பட்டது என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார்.
தமிழ்நாடு சட்டப் பேரவையில் கேள்வி நேரத்தில், அந்தியூர் பகுதியில் இருக்கும் நூலகத்தில் வைஃபை வசதி ஏற்படுத்தித் தர முடியுமா என்றும், கம்பம் தொகுதியில் இருக்கும் நூலகங்கள் சிதலமடைந்து உள்ளதால், அதனைப் புதுப்பிக்க அரசு நடவடிக்கை எடுக்குமா என்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் கே.ஜி வெங்கடாசலம் மற்றும் கம்பம் ராமகிருஷ்ணன் ஆகிய இருவரும் கேள்வி எழுப்பினர்.
நூலகங்களில் வைஃபை வசதி
சட்டமன்ற உறுப்பினர்களின் கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, தமிழகத்தில் மாணவர்களின் கல்விப் படிப்பை மேம்படுத்தும் வகையில் பல்வேறு நலத் திட்டங்களை தமிழ்நாடு அரசு அறிமுகப்படுத்தி வருகிறது. அவ்வகையில், 2022-2023 ஆம் ஆண்டுக்கான மானிய கோரிக்கையில், கிராமப்புற நூலகங்கள் மற்றும் அரசு போட்டித் தேர்வுக்கு படித்து கொண்டிருப்பவர்களுக்கு உதவும் நோக்கில், WiFi வசதி அறிமுகம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், போட்டித் தேர்வு எழுதும் மாணவர்களின் நலனுக்காக, அரசு நூலகங்களில் கடந்த ஜனவரி மாதம் முதல் முதற்கட்டமாக சுமார் 500 நூலகங்களில் வைஃபை வசதி அமைக்கப்பட்டு உள்ளதாகவும், இரண்டாம் கட்டமாக அனைத்து அரசு நூலகங்களுக்கும் வைஃபை வசதிகள் அமைத்து தரப்படும் என்றும் கூறினார்.
மேலும், தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர்களின் நிதியில் இருந்து சிதிலமடைந்த மற்றும் புதிய நூலகங்கள் அமைப்பதற்கு தமிழக முதல்வருடன் கலந்தாலோசித்து அதற்கான நடவடிக்கை வெகு விரைவில் மேற்கொள்ளப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.