உலகம்
விஜய் மல்லையா நாடு கடத்தப்படுவாரா?: இன்று தீர்ப்பு!

இந்திய வங்கிகளில் பல கோடி ரூபாய் கடன் வாங்கிவிட்டு லண்டனுக்கு தப்பியோடிய பிரபல தொழில்அதிபர் விஜய் மல்லையாவை மீண்டும் இந்தியாவுக்கு நாடு கடத்தும் வழக்கில் லண்டன் நீதிமன்றம் இன்று தீர்ப்பளிக்க உள்ளது.
இந்தியாவின் பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகளில் சுமார் 9000 கோடி ரூபாய் கடனாகப் பெற்ற தொழிலதிபர் விஜய் மல்லையா திடீரென லண்டனுக்குத் தப்பியோடினார். இதனால் விஜய் மல்லையா மீது பல வழக்குகள் நீதிமன்றங்களில் தொடரப்பட்டு அவை நிலுவையில் உள்ளன. இதனையடுத்து அவரை இந்தியாவுக்கு நாடு கடத்துவது தொடர்பாக இந்தியா தரப்பில் லண்டன் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
கடந்த ஆண்டு டிசம்பர் 4-ஆம் தேதி முதல் இது தொடர்பான விசாரணை நடந்து வருகிறது. அதில் சிபிஐ மற்றும் அமலாக்கத் துறை சார்பில் விஜய் மல்லையாவுக்கு எதிராக 150 பக்கங்கள் கொண்ட ஆவணங்களைத் தாக்கல் செய்துள்ளனர். இந்த வழக்கில் விசாரணை முடிந்த நிலையில் இன்று தீர்ப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இன்றைய தீர்ப்பு இந்தியாவுக்கு சாதகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுவதால் சிபிஐ மற்றும் அமலாக்கத் துறை அதிகாரிகள் நேற்று லண்டன் சென்றுள்ளனர்.



















