சினிமா செய்திகள்
சூரிக்காக புதிய கதையை ரெடி செய்த வெற்றிமாறன்!
வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி நடிப்பதாக இருந்த படத்தில் மிகப் பெரிய மாற்றம் ஒன்று நடந்தேறியுள்ளது.
அசுரன் திரைப்படத்தைத் தொடர்ந்து சூரியை வைத்து வெளிநாட்டில் வேலைக்குச் செல்பவர்களுக்கு ஏற்படும் பிரச்சினைகள் குறித்த நாவல் ஒன்றைப் படமாக எடுக்க இருந்தார் வெற்றிமாறன்.
இந்த படத்தின் முக்கிய படப்பிடிப்பு அனைத்தும் சவுதி அரேபியா உள்ளிட்ட வளைகுடா நாடுகளில் நடத்தத் திட்டமிட்டு இருந்தனர். கோவிட்-19 ஊரடங்கு காரணமாகப் படப்பிடிப்பு தள்ளிப்போனது. இப்போது வெளிநாடு சென்று படப்பிடிப்பு நடத்த முடியாத சூழலும் உருவாகியுள்ளது.
அதே நேரம் சூரியை நீண்ட காலமாகக் காத்திருப்பில் வைத்துவிட்டு, இதைக் காரணமாகக் காட்டி சூரியின் படத்தைத் தள்ளிப்போட விரும்பாத வெற்றி மாறன், சத்திய மங்களம் காட்டில் நடப்பது போல ஒரு கதையைத் தயார் செய்துள்ளார்.
எனவே இந்த படத்தின் ஷூட்டிங் விரைவில் தொடங்க உள்ளதாகத் தகவல்கள் கூறுகின்றன. வெற்றி மாறன் படத்திற்காக நீண்ட தாடியைச் சூரி வளர்த்து வந்தார். இந்நிலையில் இந்த படத்திற்கு என்ன கெட்டப்புக்கு சூரி மாறுவார் என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.
சூரியின் படத்தை முடித்துவிட்டு, சூர்யாவை வைத்து வாடிவாசல் படத்தை வெற்றிமாறன் இயக்குவர் என்று கூறப்படுகிறது. சூர்யாவும் பாண்டிராஜ் படத்தை முடித்துவிட்டு வெற்றிமாறன் இயக்கத்துக்குத் திரும்பச் சரியாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
எப்படியோ, சூரியை வெற்றிமாறன் ஹீரோவாக்காமல் விடமாட்டார் போல.