தமிழ்நாடு
சென்னையில் இன்று வழக்கம்போல் தடுப்பூசி முகாம் செயல்படும்: முன்பதிவு தேவையில்லை என அறிவிப்பு
சென்னையில் இன்று வழக்கம் போல் தடுப்பூசி முகாம் செயல்படும் என சென்னை மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்.
சென்னையில் கொரோனா வைரஸ் தடுப்பூசி தட்டுப்பாடு காரணமாக கடந்த சில நாட்களாக முகாம்கள் செயல்படவில்லை. இதனை அடுத்து தற்போது தடுப்பூசி மத்திய அரசிடம் இருந்து வந்துள்ளதை அடுத்து இன்று முதல் வழக்கம் போல் ஒரு தடுப்பூசி மையம் செயல்படும் என்று சென்னை மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்.
இணையதளம் மூலம் முன்பதிவு செய்யும் முறை மட்டும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக கூறியுள்ள சென்னை மாநகராட்சி ஆணையர், நேரடியாக தடுப்பூசி மையங்களுக்கு சென்று பதிவு செய்து தடுப்பூசி எடுத்துக் கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளார். சென்னை மட்டுமின்றி தமிழகத்தின் பல பகுதிகளுக்கும் தடுப்பு ஊசிகள் கையிருப்பு வந்து விட்டதை அடுத்து அனைத்து பகுதிகளிலும் இன்று முதல் தடுப்பூசி முகாம் மீண்டும் செயல்பட தொடங்கி உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தடுப்பூசி போடுவதற்கு பொதுமக்கள் மிகுந்த ஆர்வத்துடன் முன் வந்துள்ளனர் என்பதும் மே மாதத்தை விட ஜூன் மாதத்தில் கிட்டத்தட்ட இருமடங்கு தடுப்பூசி போட்டு கொண்டவர்களின் எண்ணிக்கை இருப்பதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது. மத்திய அரசு தொடர்ந்து தடுப்பூசி பற்றாக்குறை ஏற்படாத வண்ணம் தமிழகத்திற்கு தடுப்பூசியை அனுப்ப வேண்டும் என்று தமிழக அரசு மீண்டும் கேட்டுக் கொண்டுள்ளது.